“இந்த சமாதி நாங்கள் கட்டிய ஒரு தற்காலிக ஏற்பாடு. சவ்லா பீரின் உண்மையான தலம், இந்தியா-பாகிஸ்தானின் கடல் எல்லையருகே இருக்கிறது,” என்கிறார் ஃபகிரானி ஜாட்களின் 70 வயது ஆன்மிகத் தலைவரான அகா கான் சவ்லானி. அவர் குறிப்பிடும் கட்டடம் தனியாக அமைந்திருக்கும் பச்சை நிற, சிறிய தர்காவாகும். லக்பத் தாலுகாவின் பிபார் கிராமத்தருகே இருக்கும் திறந்த வெளிக்கு நடுவே அமைந்திருக்கிறது. சில மணி நேரங்களில் சவ்லா பீர் விழா கொண்டாட அங்கு வரும் மக்களால் அந்த இடம் பரபரப்பாகி விடும்.
உண்மையான தலம் ஒரு தீவில் இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக 2019ம் ஆண்டில் அது மூடப்பட்டு விட்டது. எல்லை பாதுகாப்பு படைக்கான முகாம் அங்கு இருக்கிறது. “சுதந்திரத்துக்கு முன்பு, கோடேஷ்வரை தாண்டியுள்ள கோரி ஓடையின் தீவிலிருந்து சவ்லா பீரின் வீட்டில் விழா நடந்தது. அச்சமயத்தில், தற்போதைய பாகிஸ்தானில் இருக்கும் சிந்த் பகுதியில் வசித்த ஜாட்கள் படகில் வந்து வேண்டுதல் செலுத்துவார்கள்,” என்கிறது சமூக பண்பாட்டு கையேடு.
இப்பகுதியை சேர்ந்த இந்து மற்றும் இஸ்லாமிய சமூகத்தினரும் விழாவுக்கு வந்து வேண்டுதலை செலுத்துவது பாரம்பரியமாக இருக்கிறது. வருடாந்திர நிகழ்வாக நடத்தப்படும் இந்த விழா, குஜராத்தி நாட்காட்டியின் சைத்ரா மாதத்தின் மூன்றாவது அல்லது நான்காவது நாள் நடக்கிறது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அந்த நாள் வரும்.
“சவலா பீரின் தலத்தில், அனைவரும் வரலாம். எந்த பாரபட்சமும் இல்லை. எவரும் வந்து வேண்டுதல் வைக்கலாம். இரவு வரை நீங்கள் காத்திருந்து கூட்டம் எப்படி இருக்கிறது எனப் பாருங்கள்,” என்கிறார் கச்சின் பிபார் கிராமத்தை சேர்ந்தவரும் 40 வயதுகளில் இருப்பவருமான சோனு ஜாட். 50-லிருந்து 80 ஜாட் குடும்பங்கள் அந்த கிராமத்தில் வாழ்கின்றன.


















