“நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்று தனது கடுமையான குரலில், ஆர்வமாக அவர் கேட்டார்.
நான் அவரைக் கண்டடைந்த அந்த ஆற்றின் உயரமான கரைப்பகுதிக்கு பலரும் சென்றதில்லை என்பதை உடனடியாக உணர்ந்தேன்.
கரையிலிருந்து ஆற்றின் ஓரத்தில் இறங்கிய அனிருத்தா சிங் படார், திடீரென நின்று, என்னை நோக்கித் திரும்பி எச்சரித்தார். “அந்த பகுதியில் இறந்தவர்களின் சடலங்களை எரித்துள்ளனர். நேற்று ஒருவர் இறந்தார். அங்கே நிற்க வேண்டாம். என்னைப் பின் தொடருங்கள்.”
அவரின் அறிவுறுத்தல் நியாயமானது என்றும் இறந்தவர்கள் அவர்கள் அடைந்த தனிமையில் ஓய்வெடுக்கட்டும் என்றும் நான் நினைத்தேன்.
மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள காங்சபதி ஆற்றில், இரண்டு மீட்டர் உயரமுள்ள ஆற்றங்கரையில், முழங்கால் அளவு நீரில் அவர் சாமர்த்தியமாக நடப்பதை கண்டேன். அவருக்கு இணையாக வேகமாக நடக்க என்னால் முடிந்த அளவு முயற்சித்து கரையோரம் நடந்தேன்.
தன்னுடைய வயதை நம்பாமல், திறமையை நம்பும் அவரது சுறுசுறுப்பு பிரமிக்க வைக்கிறது. 50 வயதைக் கடந்த அந்த மனிதரிடம், “ஆற்றில் என்ன செய்கிறீர்கள்?” என்று என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
அவர், தன் இடுப்பில் பையாகப் பயன்படுத்திய வெள்ளைத் துணியைத் தளர்த்தி, ஒரு இறாலை லாவகமாக எடுத்து, “இந்த இறால், எங்கள் குடும்பத்தின் இன்றைய மதிய உணவாக இருக்கக்கூடும். வரமிளகாய் மற்றும் பூண்டுடன் இந்த இறாலை வறுத்து, சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்” என்றார்.






