அவர்களின் சிரிப்பொலிதான் எங்கள் கவனத்தை ஈர்த்தது. சில சிறுமிகள் ஸ்கிப்பிங் செய்து கொண்டிருந்தனர். சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட்டு, சிலர் ஓடி விளையாடுதல் என்றிருந்த பள்ளியின் மிகப்பெரும் விளையாட்டு மைதானத்தை ஒரு சில மாணவர்கள் நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
புனே மாவட்டம் தவுண்ட் தாலுக்காவில் PARI-ன் க்ரைண்ட்மில் சாங்ஸ் திட்டத்திற்காக, அன்றைய நாள் பணியை முடித்து நாங்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது, மல்தான் கிராமத்தின் இயோல் வாஸ்தியில் உள்ள ஜில்லா பரிஷத் தொடக்கப் பள்ளி சிறுவர்களின் சிரிப்பொலி எங்கள் கவனத்தை திசை திருப்பியது.
மிகவும் பரபரப்புடன் நடந்துக் கொண்டிருந்த கிரிக்கெட் போட்டியின்போது மட்டைப் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் கேமராவுடன் நாங்கள் வருவதைக் கண்ட போதும் பந்து வீச்சாளரின் மீது கண்கள் பதித்து பந்தை அடித்து ஆட்டத்தில் கவனமாக இருந்தான். ஃபீல்டர்கள் அதை எடுக்க ஓடினர்.
சில சிறுமிகள் எங்களை சூழ்ந்து கொண்டனர். பாடுவதற்கு முதலில் அவர்கள் கூச்சப்பட்டனர். மெல்ல துணிச்சலை வரவழைத்துக் கொண்டு அவர்கள் பாடத் தொடங்கினர். பாடலை சரியாக பாடுகிறோமா என்பதை ஒருவரை ஒருவர் பார்த்து உறுதி செய்துகொண்டனர். ஆடல், பாடல் கொண்ட குழந்தைகள் விளையாட்டை பாரி குழுவின் ஜிதேந்திரா மைத் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். குழந்தைகளை வட்டமாக நிற்கவைத்து, அவர் பாடுவதையும், செய்வதையும் அப்படியே திருப்பிச் செய்ய வைத்தார்.





