ரொம்ப காலத்துக்கு முன் கூட இல்லை. மகாராஷ்டிராவின் கொல்ஹாப்பூர் மாவட்ட ஹத்கனங்க்ளே தாலுகாவின் கோச்சி கிராம விவசாயிகள், ஒரு ஏக்கர் நிலத்தில் யார் அதிகமாக கரும்பு விளைவிப்பது என்பதில் போட்டி போட்டனர். அச்சடங்கு 60 வருட பழமையானது எனக் கூறுகின்றனர் கிராமவாசிகள். அனைவருக்கும் அற்புதமான பலன்களை அளிக்கக்கூடிய ஆரோக்கியமான போட்டி அது. சில விவசாயிகள் வழக்கமான அறுவடையை விட 1.5 மடங்கு அதிகமாக 80,000லிருந்து 100,000 கிலோ வரை விளைவித்திருக்கிறார்கள்.
ஆனால் அந்த பழமையான பாரம்பரியத்தை, 2019ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் கிராமத்தின் பல பகுதிகளை பாதித்த வெள்ளம் தடுத்து நிறுத்தியது. கிராமத்தின் பல பகுதிகள் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு நீரில் மூழ்கியிருந்தது.கரும்பு பயிர் பாதிப்பைக் கண்டது. இரண்டு வருடங்கள் கழித்து ஜூலை 2021-ல் கனமழையும் வெள்ளமும் மீண்டும் பெரிய அளவிலான அழிவை கோச்சியின் கரும்பு மற்றும் சோயாபீன் பயிர்களுக்கு விளைவித்தது.
“இப்போது விவசாயிகள் போட்டி போடுவதில்லை. பதிலாக கரும்பு பயிரில் பாதியாவது தங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றனர்,” என்கிறார் 42 வயது கீதா பாடில். கோச்சியில் வசிக்கும் குத்தகை விவசாயி அவர். ஒருகாலத்தில் கரும்பு உற்பத்தியை பெருக்குவதற்கான எல்லா நுட்பங்களையும் கற்றுக் கொண்டு விட்டதாக நம்பிய கீதா, இரண்டு வெள்ளங்களிலும் 8 லட்சம் கிலோவுக்கும் அதிகமான கரும்பை இழந்திருக்கிறார். “ஏதோவொன்று தப்பாகிவிட்டது,” என்கிறார் அவர். காலநிலை மாற்றத்தை அவர் யோசிக்கவில்லை.
”கனமழை பாணி முற்றிலும் (2019 வெள்ளத்திலிருந்து) மாறிவிட்டது,” என்கிறார் அவர். 2019 வரை அவர் ஒரு முறையை பின்பற்றினார். ஒவ்வொரு கறும்பு அறுவடைக்கும் பிறகு, அக்டோபர் - நவம்பர் காலத்தில், சோயாபீன், வேர்க்கடலை, நெல்லின் வகைகள், மரபின சோளம் ல்லது கம்பு போன்றவற்றை விதைத்து, மண் சத்து சேரச் செய்வார். அவரின் வாழ்க்கைக்கும் வேலைக்கும் என நிலையான பரிச்சயப்பட்ட ஒரு ஓர்மை இருந்தது. இனி அது கிடையாது.
“”இந்த வருட (2022) பருவ மழை ஒரு மாதம் தாமதித்து வந்தது. மழை பொழியத் தொடங்கி ஒரு மாதத்துக்குள் நிலங்களுக்குள் வெள்ளம் வந்துவிட்டது.” ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் பெரும் நிலங்கள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு நீருக்கடியில் இருந்தன. அதிக நீர் பயிரின் வளர்ச்சியை தடுத்து அழிவை கொடுத்ததால், கரும்பு விதைத்திருந்த விவசாயிகள் பெரும் நஷ்டங்களை சந்தித்தனர். நீர்மட்டம் அதிகமானால் வீடுகளை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு பஞ்சாயத்து அழைப்பு கூட விடுத்தது.



















