செப்டம்பர் 10ம் தேதி, பெரும்பாலும் கோண்டு ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த சில நூறு விவசாயிகள், பஸ்டர் மாவட்டத்தின் தலைநகரான ஜக்தல்பூரில் இருந்து, சட்டிஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு டிராக்டரிலும், நடந்தும் பேரணியாக சென்றனர். அதன் தொலைவு 280 கிலோமீட்டர் ஆகும். கொடேபாட் கிராமத்தில் சாலையோரத்தில் அவர்கள் ஓய்வெடுப்பதற்காக தங்கியிருந்தபோது நான் அவர்களை சந்தித்தேன். தரையில் அவர்கள் எடுத்து வந்திருந்த பொருட்கள், அறிவிப்பு பலகைகள் மற்றும் சிறிய பைகள் இருந்தன. அவர்களில் பெரும்பாலானோருக்கு இந்தி தெரியாது, அவர்கள் ஹல்பி அல்லது கோண்டி மொழி பேசுகிறார்கள்.
“நாங்கள் ஜக்தல்பூரில் உள்ள தண்டேஸ்வரி கோயிலில் இருந்து செப்டம்பர் மாதம் 10ம் தேதி நடக்க துவங்கினோம். நாங்கள் செப்டம்பர் 18ம் தேதி ராய்ப்பூர் சென்றடைவோம்“ என்று பாஸ்டர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனுராம் காஷ்யப் கூறுகிறார். “முதலமைச்சர் ராமன் சிங், எங்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் மற்றும் மற்ற கோரிக்கைகளையும் கொடுக்க வேண்டும்“ என்று அவர் மேலும் கூறினார்.
“நாங்கள் அனைவரும் சிறு விவசாயிகள். எங்கள் நிலங்கள் மழையை நம்பியுள்ளது. மழை பொழியாவிட்டால், விவசாயம் செய்ய முடியாது. எங்களின் 2 முதல் 3 ஏக்கருக்கு கடன்கள் உள்ளன. எனது தந்தை மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.60 ஆயிரம், 2012ம் ஆண்டு கடனாக வாங்கினார். அதில் ஒரு பகுதியை திரும்ப செலுத்திவிட்டு, அவர் 2014ம் ஆண்டு அவர் இறந்துவிட்டார். தற்போது வங்கியில் எங்களுக்கு 2 லட்ச ரூபாய் கடன் உள்ளதாக கூறுகிறார்கள். எனவே ராய்ப்பூர் நோக்கிய இந்த பேரணியில் நான் கலந்துகொண்டுள்ளேன்“ என்கிறார்.




