ராமா அதெல்லு கண்டேவாட் எல்லா நேரமும் கவலையுடன் இருக்கிறார். கவலைக்கான காரணம் அவருக்குதான் தெரியும். கோவிட்டின் இரண்டாம் அலை ஓய்ந்தாலும் அதன் நினைவுகளிலிருந்து அவரால் மீள முடியவில்லை. “சுடுகாட்டில் கொஞ்ச நாட்களாக வேலை குறைவாக இருக்கிறது,” என்கிறார் அவர். “ஆனால் மூன்றாம் அலை வந்தால் என்ன செய்வது? மீண்டும் ஓர் அழிவு நேர்வதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.”
சுடுகாட்டுப் பணியாளராக 60 வயது ராமா, ஒஸ்மனாபாத்தின் கபில்தர் ஸ்மஷன் பூமியில் வேலை பார்க்கிறார். சுடுகாட்டுக்குள்ளேயே குடும்பத்துடன் அவர் வாழ்கிறார். உடன் 78 வயது தாய் அடில்பாய், 40 வயது மனைவி லஷ்மி மற்றும் நான்கு மகள்களான 18 வயது ராதிகா, 12 வயது மனிஷா, 10 வயது சத்யஷீலா, 3 வயது சரிகா மற்றும் ராதிகாவின் 22 வயது கணவர் கணேஷ் ஆகியோர் வசிக்கின்றனர்.
சுடுகாட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டியது ராமாவின் வேலை. “சடலங்களுக்கு சிதைகளை அமைப்பேன். உடல் எரிந்தபிறகு சாம்பலை சுத்தப்படுத்துவேன். இன்னும் பல வேலைகள் செய்வேன்.” இந்த வேலைகளில் கணேஷ் அவருக்கு உதவுகிறார். “இந்த வேலை செய்ய எங்களுக்கு மாதம் 5000 ரூபாய் ஊதியமாக நகராட்சி சபையிலிருந்து கிடைக்கிறது,” என்கிறார் ராமா. இருவரும் சேர்ந்து செய்யும் வேலைக்கான அந்தத் தொகைதான் குடும்பத்துக்கான ஒரே வருமானம்.
12 வருடங்களுக்கு முன்பு, 200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நந்தெத் பகுதியிலிருந்து இங்கு ராமாவும் அவரின் குடும்பமும் இடம்பெயர்ந்தனர். அவர்கள் மசான்யோகி சமூகத்தை சேர்ந்தவர்கள். மேய்ச்சல் பழங்குடிச் சமூகம் அது. பாரம்பரியமாக சுடுகாட்டில் வேலை செய்பவர்கள் அவர்கள். கண்டேவாடின் குடும்பத்தைப் போல் சுடுகாட்டிலேயே வசிக்கும் குடும்பங்களும் இருக்கின்றன.









