பல்வேறு துயரங்களைப் பார்த்துவிட்டாலும், அந்த வீட்டில் இன்னும் சிரிப்புச் சத்தம் மறையவில்லை.
தண்ணீரின்றித் தமிழகம் காய்ந்துபோயிருந்தாலும், ஒரு பண்ணையில் இன்னும் பூக்கள் பூக்கின்றன.
மண்வளம் அதிவிரைவாகக் குறைந்துகொண்டிருக்கும் மாநிலத்தில், இந்தச் சிறு நிலம் இன்னும் இயற்கை உரங்களை மட்டுமே தொடுகிறது.
கடுமையான வறட்சிக்கு மத்தியில், கணவனை இழந்த, இரு குழந்தைகளின் தாய் ஒருவர், மனதைரியத்துடன் வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கிறார். இதுவரை ஒரு வெற்றிகரமான விவசாயியாக சாதித்துக்கொண்டிருக்கிறார்.
இவரின் கதையை , வாழ்க்கையோடு இவர் நடத்திய போராட்டத்தை, PARI அமைப்பு முதன்முதலில் பதிவு செய்தது. இந்த வாரம் இவர் சென்னையில் ‘ homepreneur ’ விருதினைப் பெற்றார். வீட்டிலிருந்தே சுதந்திரமாகத் தொழில் செய்வோருக்கான விருது இது.
சிவகங்கை மாவட்டம் முத்தூர் கிராமத்தில் உள்ள மேலக்காடு குடியிருப்பைச் சேர்ந்தவர் சந்திரா சுப்பிரமணியன். ஒரு ஆண் விவசாயியை விட கடுமையாக உழைப்பவர்; ஒரு சிறுவனின் உடைகளை அணிந்தபடி நமக்கு காட்சி தருகிறார். “இது என் மகனின் சட்டை”, என்றபடி களுக்கென்று சிரிக்கிறார். அவர் மகனுக்கு 10 வயது; இவருக்கோ 29. தன்னுடைய இரவு உடைக்கு மேலே அந்த நீல சட்டையை அணிந்து பொத்தானிட்டு, தலைநிமிர்கிறார். உடையின் மேல் உடையாக அணிந்திருந்தாலும் முன்பை விட ஒல்லியாகவே தெரிய, “ஏன் எடை குறைந்துகொண்டே போகிறது?”, என்று வினவுகிறேன். “வேலை”, என்று சன்னமாக பதில் வருகிறது. வயல்களுக்கிடையே தான் எழுப்பிய வரப்பை சுட்டிக் காட்டி, “வரப்பு மிகவும் குறுகலாக இருந்ததா? சரி என்று நானே மண்வெட்டியை எடுத்து அகலப்படுத்திவிட்டேன்”, என்கிறார். கிடுகிடுவென்று வளர்ந்த பல ஆண்களுக்கே அந்த வேலையைப் பற்றி நினைத்தால் வேண்டா வெறுப்பாக இருக்கும். அவர்களின் புலம்பல்களை நானே நேரடியாகக் கேட்டிருக்கிறேன்.







