ஆந்திராவின் கடலோர பகுதியில் இருக்கும் கோட்டபலம் கிராமத்தில் உள்ள பந்து துர்கா ராவின் தென்னந்தோப்பு விரைவில் காணாமல் போய்விடும். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கோட்டபலம், கோவடா, மருவடா (மற்றும் அதன் இரண்டு குக்கிராமங்களான குடேம் மற்றும் தேக்கலி) ஆகியவற்றை உள்ளடக்கிய 2073 ஏக்கர் நிலத்தை, இந்திய அணுசக்தி கழகத்திற்காக (NPCIL), மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்த உள்ளது இதில் இவரது ஒரு ஏக்கர் நிலமும் அடங்கும்.
ஆனால் 2017 ஆம் ஆண்டு மே மாதம் துர்கா ராவ் ஆந்திரப்பிரதேச கிராமின் விகாஸ் வங்கியிலிருந்து 60,000 ரூபாய் கடன் பெற்றிருக்கிறார். "ஒருபுறம் வங்கிகள் விவசாயக் கடன்களை வழங்குகின்றன, மறுபுறம் வருவாய்த்துறை அதிகாரிகள் புல எண் 33 (அவரது நிலம் அமைந்துள்ள இடம்) நீரோடை என்று கூறுகின்றனர். இரண்டுமே அரசு நிறுவனங்கள். இரண்டுமே எப்படி உண்மையாக இருக்க முடியும்?", என்று அவர் குழப்பத்துடன் கேட்கிறார்.
இந்த மின் உற்பத்தி நிலையம் சுமார் 2,200 விவசாயிகள் மற்றும் மீனவ குடும்பங்களை இடம்பெயர்த்துவதற்கு வாய்ப்புள்ளது என்று ஹைதராபாத்தில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஜனவரி 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட சமூகத் தாக்க மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் திட்டத்திற்கு 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ரணஸ்தலம் பகுதியில் உள்ள இந்த மூன்று கிராமங்கள் மற்றும் இரண்டு குக்கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படும் பணி 2011 ஆம் ஆண்டில் தொடங்கியது, அது 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு மேலும் துரிதப்படுத்தபட்டது. ஆனால் மார்ச் 2018 இல் இந்த மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது, NPCIL ஒரு மத்திய அரசு நிறுவனமாக இருப்பதால், "இத்திட்டம் மேலும் தாமதமாகும்", என்று கோட்டபலம் பஞ்சாயத்து தலைவரான சுங்கர தனுஞ்சய ராவ் கூறுகிறார்.
இது கிராம மக்களிடையே நிச்சயமற்றதன்மையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.








