“அவர்கள் என்னை கொன்றிருப்பார்கள்…” என்கிறார் 28 வயது அருணா அருகே விளையாடிக் கொண்டிருக்கும் ஆறு வயது மகளை கலக்கத்துடன் பார்த்துக் கொண்டே. ‘அவர்கள்’ என்பவர்கள் அருணாவின் குடும்பத்தினர். அவர் நடந்து கொண்ட விதத்தையும் அதற்கான காரணத்தையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ”பொருட்களை தூக்கி எறிவேன். வீட்டில் தங்க மாட்டேன். யாரும் எங்களின் வீட்டருகே கூட வர மாட்டார்கள்…”
காஞ்சிபுர மாவட்டத்திலிருக்கும் அவரது வீட்டருகே இருக்கும் மலைகளில் அடிக்கடி அவர் சுற்றிக் கொண்டிருப்பார். அவர் காயப்படுத்துவார் என்கிற அச்சத்தில் சிலர் அவரிடமிருந்து தப்பி ஓடுவார்கள். பிறர் அவர் மீது கல்லெறிவார்கள். அவரது அப்பா அவரை வீட்டுக்கு திரும்ப அழைத்து வருவார். சில சமயங்களில் வெளியே செல்லாமலிருக்க நாற்காலியில் அவரை கட்டிப் போடுவார்.
மனச்சிதைவு நோய் கண்டறியப்பட்டபோது அருணாவுக்கு (உண்மையான பெயரில்லை) 18 வயது. யோசிக்கும் விதம், உணரும் விதம், நடத்தை ஆகியவற்றை அந்த நோய் பாதிக்கிறது.
செங்கல்பட்டு தாலுகாவில் இருக்கும் கொண்டாங்கி கிராமத்தின் தலித் காலனியிலுள்ள வீட்டுக்கு வெளியே அமர்ந்திருக்கும் அருணா, கடினமான நாட்களை பற்றிய பேச்சை நிறுத்துகிறார். சட்டென விலகி செல்கிறார். ஒட்ட வெட்டப்பட்ட முடியுடன் பிங்க் நிற நைட்டி அணிந்திருக்கும் உயரமான அவர் சற்று குனிந்து நடக்கிறார். ஓரறை கொண்ட குடிசைக்குள் நுழைந்து மருந்துச் சீட்டையும் இரண்டு மாத்திரை அட்டைகளையும் எடுத்து வருகிறார். ”இது எனக்கு தூக்கத்தை தரும். இன்னொன்று நரம்பு தளர்ச்சி வராமலிருக்க கொடுத்திருக்கிறார்கள்,” என்கிறார் அவர் மாத்திரைகளை காண்பித்து. “இப்போது நல்லபடியாக தூங்குகிறேன். ஒவ்வொரு மாதமும் செம்பாக்கத்துக்கு (ஆரம்ப சுகாதார மையம்) சென்று மருந்துகள் பெற்று வருகிறேன்.
ஷாந்தி சேஷா இல்லையெனில் அருணாவின் நோயைக் கண்டறிந்திருக்க முடியாது.



