அவர்கள் வந்தார்கள்.பேரணி நடத்தினார்கள்.நாட்டின் பாராளுமன்றத்தின் வாயிலிலேயே கோஷங்களை முழங்கினார்கள்.அரசியல் தலைமைகளை தங்கள் முன்வந்து பேச நிர்பந்தித்தார்கள். இறுதியில் அவர்கள் நிமிர்ந்த தலைகளோடு புறப்பட்டார்கள்.
ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமாக அமையவில்லை.நவம்பர் 30ன் குளிர் காலையில் தூக்கம் கலைந்து எழுகையில் தாரா தேவியின் எலும்புகளில் ஓசைகள் எழுந்தன.”திறந்த வெளி தரையில(ராம்லீலா மைதானத்தில்) தூங்கினதால என் உடம்பு விரைத்துவிட்டது” என்கிறார் அவர். வாரணாசியிலிருந்து வந்திருக்கும் அவர் அந்த இரவிற்கு முன் 14மணி நேரத்திற்கும் மேல் ரயில் பயணத்தில் கழித்திருக்கிறார்.”என் கம்பளிச் சட்டையும் கிழிஞ்சுபோச்சு. என்கிட்ட கணமான போர்வையும் இல்ல” என்று கூறுகிறார். காலை 8 மணிக்கு தன்னார்வலர்கள் வழங்கிய கிச்சடியை உண்டபின் அவர் ராம்லீலா மைதானத்திலேயே அதிக பரபரப்பாக இருந்த ஒரு இடத்திற்கு செல்கிறார்.அங்கு தன்னார்வ மருத்துவக் குழுவினர் தங்களை அணுகும் அனைவருக்கும் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மத்திய டெல்லியில் இருக்கும் அந்த மைதானத்தில் தங்கியிருக்கும் பத்தாயிரக் கணக்கான விவசாயிகளில் பலர் மருந்துகள் வேண்டி மருத்துவர்களை பார்த்தனர்.நவம்பர் 28 அன்று, தெரு விளக்குகள் இல்லாத அந்த இருண்ட இரவில் வெளிச்சத்திற்காக விவசாயிகள் சிலர் தங்கள் இருசக்கர வாகனத்தின் முன் விளக்குகளை அணைக்காமல் நிறுத்திவிட்டு சென்றனர்.”பலபேர் வந்து இருமல்,சளி மற்றும் மேல்வலி பிரச்சனைகள் இருக்குன்னு சொன்னாங்க” என்று விவசாயிகளைப் பார்த்துக் கொண்டே அவர்கள் படும் சிரமங்களை விவரிக்கிறார் மருத்துவர் கே.கே.மிட்டல். ”அவங்க அவங்களோட வயல்கள விட்டு இந்த காற்று மாசுபட்ட டெல்லிக்கு வந்திருக்காங்க”.










