அன்றைய நாளில் அவரது வியாபாரத்தை தொடங்கும் நேரம் அது. ஷிவ்புரா கிராமத்தின் அடிகுழாயிடம் நிற்கும் 9-10 பெண்களருகே மோட்டார் சைக்கிளை நிறுத்துகிறார் பச்சு. “அக்கா… இந்த டிசைனைப் பாருங்கள்,” என்கிறார் அவர். “சிதி மார்க்கெட்டில் இருக்கும் பெரியக் கடைகளில் கூட இந்த மாதிரியான புடவைகள் உங்களுக்குக் கிடைக்காது. உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் வாங்காதீர்கள்.”
நாளின் முதல் விற்பனையை உறுதிபடுத்தும் நோக்கில் பெரும் அளவில் பணத்தை குறைக்கிறார் பச்சு: “ஒவ்வொரு புடவையின் விலையும் 700 ரூபாய். உங்களுக்கு நான் வெறும் 400 ரூபாய்க்கு தருகிறேன்…”
அடுக்கி வைக்கப்பட்டிருந்த 15-20 நைலான் புடவைகளை அப்பெண்கள் எடுத்துப் பார்க்கின்றனர். 150 ரூபாய் கொடுப்பதாக ஒருவர் சொல்கிறார். புடவையின் அசல் விலையே 250 ரூபாய் எனக் கோபமாக முணுமுணுத்தபடி புடவைகளை எடுத்து மீண்டும் கட்டுகிறார் பச்சு. அந்த நாளின் முதல் வாடிக்கையாளராக மாறியிருக்கக் கூடிய பெண் மீண்டும் அடிகுழாய் பக்கம் திரும்புகிறார்.
அதிருப்தியுடன் அடுத்த ஊரான மத்வாவுக்கு மோட்டார் சைக்கிளில் கிளம்புகிறார் பச்சு. “சில நேரங்களில் மக்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். எதையும் வாங்க மாட்டார்கள்,” என்கிறார் அவர் உள்ளூர் பகேலி மொழியில். “எங்களின் நேரம் புடவையை விரித்துக் காட்டுவதிலும் மடித்து வைப்பதிலுமே அதிகம் கழிகிறது.”
மூன்று கிலோமீட்டர் தூரம் கடந்து மத்வாவின் அடிகுழாயருகே நீர் குடிக்க வண்டியை நிறுத்துகிறார். “நான் கிளம்பி நான்கு மணி நேரங்கள் ஆகிவிட்டது,” என்கிறார் அவர். “இன்னும் முதல் ‘போனி’ (முதல் விற்பனை) கூட ஆகவில்லை. 150 ரூபாய் பெட்ரோலுக்குக் காலையில் செலவழித்தேன். அதை கூட திரும்ப ஈட்ட முடியவில்லை.”









