ஊரடங்கு காரணமாக பெங்களூரை விட்டு அப்துல் சத்தார் சென்று நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிறது.
“தாமதம் ஆனாலும் நாங்கள் இங்கிருந்து சென்றாக வேண்டும்” என அவர் கூறுகிறார். அந்தச் சமயத்தில்தான், மே 20, அம்பன் புயல் தரையிறங்கியது. இருந்தாலும், தங்கள் கிராமமான சக் லாச்சிபூருக்குச் செல்லும் 1,800கிமீ பயணத்தை அப்துல் சத்தாரும் அவரது நண்பர்களும் தைரியமாக தொடங்கினர். மேற்கு வங்காளத்தின் பசிம் மெதின்பூர் மாவட்டத்தில் இவர்கள் கிராமம் உள்ளது.
அப்துல், மும்பையிலிருந்து பெங்களூரு வந்து ஒருசில மாதங்களே ஆகிறது. ஜனவரி அல்லது பிப்ரவரியில் இங்கு வந்தேன் என்கிறார். இவரது மனைவி ஹமிதா பேகம், 32, மற்றும் குழந்தைகள் சல்மா கதுன், 13, யசீர் ஹமீது, 12 ஆகியோர் கதல் தாலுகாவிலுள்ள தங்கள் கிராமத்தில் இருக்கும் மூன்று அறை கொண்ட சிறிய வீட்டில் வசிக்கின்றனர். இவரது குடும்பத்திற்குச் சொந்தமாக கால் ஏக்கர் நிலம் உள்ளது. அதில் இவரது சகோதரர் நெல் பயிரிட்டுள்ளார்.
எட்டாம் வகுப்பிற்கு மேல் பள்ளிக்குச் செல்லாமல், கிராமத்தில் உள்ள பலரைப் போல தையல் கற்க தொடங்கினார் அப்துல். அன்றிலிருந்து ஒவ்வொரு இடமாக நகர்ந்து கொண்டிருக்கிறார். டெல்லியில் சில வாருடங்கள் வேலை, பின்பு மும்பை, 5-6 மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்குச் செல்வது என இப்படியே போகிறது அவரது வாழ்க்கை. “நான் இயந்திர தையல் வேலைப்பாடுகளைச் செய்வேன். மும்பையில் எனக்கு வேலை அதிகமாக இல்லை. அதனால் எனது உறவினரோடு சேர்ந்து பணியாற்ற முடிவு செய்தேன்” என்கிறார் அவர்.
அப்துல், 40, தனது உறவினர் ஹஸனுல்லா ஷேக், 33, தெற்கு பெங்களூரில் வைத்திருந்த சிறிய தையல் கடையில் சேர்ந்தார். ஐந்து நபர்களோடு ஒற்றை அறையை பகிர்ந்து கொண்டார். இவர்கள் அனைவரும் சக் லச்சிபூரைச் சேர்ந்தவர்களே. ஆறு பேரும் ஹஸனின் கடையில் தையல் வேலை பார்க்கிறார்கள்.







