ரத்தத்தில் நனைந்த ஸ்ட்ரெச்சரைப் பார்த்ததும் ஸ்ரீகிருஷ்ண பாஜ்பாய் பீதியடைந்தார். "பிரசவம் எளிதானது அல்ல என்று நாங்கள் எச்சரித்தோம்," என்கிறார் 70 வயதான விவசாயி. உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் ஒரு கடுங்குளிரான பிப்ரவரி பிற்பகலில் தனது வீட்டிற்கு வெளியே நெருப்பு மூட்டி கதகதப்படுத்திக் கொண்டிருந்தார் அவர். "கிராமத்தில் உள்ள சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர் எனது மருமகளின் கர்ப்பத்தை 'அதிக ஆபத்து' எனக் குறிப்பிட்டுள்ளார்."
இது 2019 செப்டம்பரில் நடந்தாலும், ஸ்ரீகிருஷ்ணர் அதை நேற்று நடந்த சம்பவம் போல் நினைவு கூர்ந்தார். "[வெள்ளம்] நீர் வடிந்துவிட்டது. ஆனால் அது சாலைகளை சேதப்படுத்தி விட்டது. எனவே ஆம்புலன்ஸ் எங்கள் வீட்டு வாசலுக்கு வர முடியவில்லை," என்று அவர் கூறுகிறார். ஸ்ரீகிருஷ்ணாவின் குக்கிராமம், தண்டா குர்த், சாரதா மற்றும் காக்ரா நதிகளுக்கு அருகில் உள்ள லஹர்பூர் தொகுதியில் இருக்கிறது. இங்குள்ள கிராமங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியவை. அவசரக் காலங்களில் போக்குவரத்தை ஏற்பாடு செய்வது கடினம்.
தாண்டா குர்த் முதல் சீதாபூரில் உள்ள மாவட்ட மருத்துவமனை வரையிலான 42 கிலோமீட்டர் பயணம், பிரசவ வலியில் இருக்கும் எந்தவொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் நீண்ட பயணமாக இருக்கும். முதல் ஐந்து கிலோமீட்டர்களின் சீரற்ற, வழுக்கும் சாலைகளில் இரு சக்கர வாகனம் மூலம் செல்ல வேண்டுமெனில் அப்பயணம் இன்னுமே நீண்டதாக இருக்கும். "ஆம்புலன்ஸுக்குச் செல்ல நாங்கள் அதைச் செய்ய வேண்டியிருந்தது" என்கிறார் ஸ்ரீகிருஷ்ணா. "ஆனால் நாங்கள் மாவட்ட மருத்துவமனையை அடைந்ததும் சிக்கல்கள் ஏற்பட ஆரம்பித்தன."
மம்தாவுக்கு பெண் குழந்தை பிறந்த பிறகும் ரத்தப்போக்கு நிற்கவில்லை. நல்லது நடக்குமென எதிர்பார்த்தேன் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். "இது எதிர்பாராதது அல்ல. பிரச்சனைகள் இருக்கலாம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் மருத்துவர்கள் அவளைக் காப்பாற்றுவார்கள் என்று நாங்கள் நினைத்தோம்.”
ஆனால் அவரை ஸ்ட்ரெச்சரில் ஒரு வார்டுக்கு மாற்றியபோது, ஸ்ரீகிருஷ்ணனால் அதன் மேலிருந்த வெள்ளைத் தாளைப் பார்க்க முடியவில்லை. “அதிக ரத்தம் இருந்தது. என் வயிற்றில் ஒரு முடிச்சு இருப்பதைப் போல் உணர்ந்தேன், ”என்று அவர் கூறுகிறார். “டாக்டர்கள் ரத்தத்தை ஏற்பாடு செய்ய சொன்னார்கள். நாங்கள் அதை மிக விரைவாக சமாளித்தோம், ஆனால் நாங்கள் ரத்த வங்கியிலிருந்து மருத்துவமனைக்குத் திரும்பிய நேரத்தில், மம்தா இறந்துவிட்டார்.”
அவருக்கு 25 வயது.









