புகையிலை பயன்பாட்டினைக் குறைக்கும் நோக்கில் உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை கட்டுப்பாட்டு கட்டமைப்பு கூட்டமைப்பிற்கும் (FCTC) புகையிலை கொட்டகைகள் மூடப்படுதல், பயிரிடும் நிலங்கள் சுருங்குதலுக்கு தொடர்புள்ளது. 2016ஆம் ஆண்டில், இந்தியா உட்பட FCTCஇல் கையெழுத்திட்ட நாடுகள், படிப்படியாக புகையிலை உற்பத்தியைக் குறைக்க ஒப்புக்கொண்டன. இதனால் புதிய கொட்டகைகளுக்கான உரிமங்கள் கொடுப்பதை புகையிலை வாரியம் நிறுத்திவிட்டது. புகையிலையில் லாபம் குறைவதால் இதற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கையும் சரிந்து வருகிறது.
டி.அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் 40 வயது குத்தகை விவசாயி சீனிவாச ராவ். இவர், ஆண்டு கூலியாக ஏக்கருக்கு ரூ.30,000 என்று ஒன்பது ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து புகையிலை பயிரிட்டத்தில் கடந்த விவசாய பருவத்தில் மட்டும் 1.5 லட்சம் கடன் ஏற்பட்டுவிட்டது. “நான் 2012ஆம் ஆண்டு ரூ.6 லட்சம் செலவில் கொட்டகை கட்டினேன். அதை கடந்தாண்டு ரூ.3 லட்சத்திற்கு விற்றுவிட்டேன்,” என்கிறார் அவர். “இப்போது கொட்டகையை வாங்குவதற்கு கூட யாரும் தயாராக இல்லை. ஒவ்வொரு கொட்டகைக்கும் அரசு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசிடம் நாங்கள் கோருகிறோம். அப்படி கிடைத்தால் சில நிமிடங்களில் நாங்கள் புகையிலை பயிரிடுவதை கைவிட்டு விடுவோம். 2010ஆம் ஆண்டு தொழிலாளர் குழுவான சுமார் 33 முத்தாஸ் இங்குள்ளக் கொட்டகையில் வேலை செய்வதற்காக கிராமத்திற்கு வெளியிலிருந்து வந்தனர். இந்தாண்டு 10 முத்தாஸ் மட்டுமே இங்கு உள்ளனர்.”
இவை அனைத்தும் பிரகாசம் புகையிலை விவசாயிகளை குறைந்தத் தண்ணீரில் வளர்ந்து, லாபம் தரும் மாற்று பயிர்களுக்கு மாறுவதற்கு உந்தின. முக சிந்தலா கிராமத்திற்கு நான் வந்தபோது, சுப்பாராவ் தனது ஸ்மார்ட் போனில் லக்கர் பயிர்கள் குறித்த யூடியூப் சேனல் வீடியோவை மற்ற விவசாயிகளிடம் காட்டிக் கொண்டிருந்தார். “எங்கள் கிராமத்திலும் இப்பயிரை நாங்கள் முயற்சிக்க வேண்டும்,” என்கிறார். அவர்கள் தலையசைத்துவிட்டு அதுபற்றி மேலும் கூறுமாறு கேட்கின்றனர். “இது ஒரு பணப்பயிர். இது ஸ்ரீகாகுலம் மாவட்டத்திலும், ஒடிசாவின் சில பகுதிகளிலும் விளைவிக்கப்படுகிறது, இதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை,” என்று அவர் விளக்குகிறார்.
‘எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும்‘ என்று விவசாயிகள் கூறும் சுவரொட்டிகள் டெல்லியில் உள்ள பேருந்து நிறுத்தங்கள், ஆட்டோக்களில் காணப்படுகின்றன. புகையிலை வியாபாரிகளுக்கான தேசிய அமைப்பான அகில பாரதிய பான் விக்ரேதா சங்கதனின் இலச்சினை மற்றும் பெயரை அது கொண்டுள்ளது. இந்த பிரச்சாரம் குறித்து விவசாயிகளிடம் நான் கேட்டபோது அவர்கள் புகையிலை நிறுவனங்கள் குறித்து திட்டித் தீர்த்தனர். சுப்பா ராவ் பேசுகையில், “பாசன வசதிக்காகவோ அல்லது சிகரெட் நிறுவனங்களுக்கு எதிராகவோ விவசாயிகள் ஒன்றிணைந்து போராடியிருந்தால், நாம் நன்றாக இருந்திருக்கலாம்.”
இந்த கட்டுரையின் மற்றொரு பதிப்பு, இணைந்து எழுதப்பட்டு பிப்ரவரி 2, 2018 அன்று ‘தி இந்து பிசினஸ்லைனில்’ முதலில் வெளியிடப்பட்டது.
தமிழில்: சவிதா