அந்தி வேளையில் ஆள் அரவமற்ற அந்த பூங்காவுக்குள் அவர் சென்றார். பெஞ்சில் அமர்ந்தார். நீண்ட குச்சியையும் சிறு செல்பேசியையும் அருகே வைத்தார். வருடத்தில் இரண்டாவது முறையாக பூங்கா அமைதியாக இருந்தது. குழந்தைகளும் பெரியவர்களும் மீண்டும் வீடுகளுக்குள் அடைபட்டிருந்தனர்.
சில நாட்களாக அவர் பூங்காவுக்கு வந்து கொண்டிருக்கிறார். இருள் கவிந்து தெருவிளக்குகள் எரியத் தொடங்கியதும் கிளைகளின் நிழல்கள் தரையில் படர்ந்தன. மரங்கள் கொஞ்சம் காற்று கொடுத்தது. தரையில் கிடந்த காய்ந்த சருகுகள் சுழன்று திசைதிருப்பும் நடனத்தை அளித்தன. எனினும் அவருக்குள் இருந்த இருட்டு ஆழமாக இறங்கியது. அங்கு பல மணி நேரங்களுக்கு அவர் அமைதியாக அமர்ந்திருந்தார். உள்ளே மனம் அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
20 வயதுகளில் இருக்கும் இளைஞருக்கு பரிச்சயமான முகம். ஆனாலும் பலருக்கு அவர் தெரியாமல் இருந்தார். அவருடைய சீருடை அவரது பணியை வெளிப்படுத்தியது. அருகே இருக்கும் ஒரு கட்டடத்தின் காவலாளி அவர். பெயர்…அதைப் பற்றி யாருக்குக் கவலை? ஏழு வருட காவலாளி வேலை. ஆனாலும் கட்டடத்தில் வசிக்கும் ஜமீந்தார்களுக்கு அவரைத் தெரியாது.
அவர் உத்தரப்பிரதேசத்தின் பந்தல்காண்டைச் சேர்ந்தவர். அங்குதான் அவருடைய தந்தை தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தியமைக்காகக் கொல்லப்பட்டார். அவரது தந்தை ஒரு கவிஞர். கதைசொல்லி. அவரது ஒரே உடைமையாக இருந்த எழுத்துகளும் புத்தகங்களும் எரிக்கப்பட்டன. உடைந்தும் கருகியும்போன குடிசைதான் மிச்சம். அதற்குள் உடைந்த ஒரு தாயும் பத்து வயது மகனும் இருந்தனர். அச்சம் அந்தத் தாயைப் பீடித்தது: மகனை அவர்கள் கொண்டு சென்றுவிட்டால் என்ன செய்வது? மகனை ஓடிவிடச் சொன்னார். எத்தனை தூரத்துக்கு ஓட முடியுமோ ஓடச் சொன்னார்.
மகன் படிக்க விரும்பினான். பெரிய பூட்ஸுகளை அணிய விரும்பினான். ஆனால் அவன் அடைக்கலம் தேடிய மும்பை நகர ரயில்நிலையத்தில், காலணி துடைத்துக் கொண்டிருந்தான். கால்வாய்களை சுத்தம் செய்தான். கட்டுமானத் தளங்களில் பணிபுரிந்தான். மெல்ல ஒரு காவலாளியாக அவன் உயர்ந்தான். தாய்க்கு பணம் அனுப்ப அது போதுமானதாக இருந்தது. அவனுக்குக் கல்யாணம் செய்து பார்க்க தாய் விரும்பினார்.



