மங்கலான சுவர்களைக் கொண்ட இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் அஸ்லான் அஹமது தனது அறையின் ஒரு மூலையில் அமர்ந்து தனது கைபேசியை நோண்டிக் கொண்டிருக்கிறார். அவரது கைகள் நடுங்குகின்றன, அவர் தனது தாயிடம் காஷ்மீரி மொழியில் "எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை", என்று அழுகிறார். தனக்கு தலைவலி மற்றும் உடல்வலி இருப்பதாகக் கூறுகிறார். அவரது தாயார் சகீனா பேகம் தண்ணீர் கொண்டு வருவதற்காக சமையலறைக்கு விரைகிறார், அஸ்லானின் அழுகையை கேட்டு அவரது தந்தை பஷீர் அஹமது அறைக்குள் வந்து, போதைப்பொருளை உடனடியாக நிறுத்திவிட்டால் இத்தகைய அறிகுறிகள் இருக்கத்தான் செய்யும் என்று மருத்துவர்கள் அவருக்கு தெரிவித்ததாகக் கூறி, அவரை ஆற்றுப்படுத்த முயற்சிக்கிறார்.
காலப்போக்கில், சகீனா பேகம் மற்றும் பஷீர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) 20 வயதாகும் அஸ்லானின் அறையை பூட்டு போட்டு பாதுகாக்கத் துவங்கினார்கள். தவிர அவர்களது வீட்டில் உள்ள 10 ஜன்னல்களும் மூடப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. அவரது அறை, தாயின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக, சமையல் அறைக்கு அருகிலேயே உள்ளது. "உங்களது குழந்தையை பூட்டி வைப்பதை போன்ற கொடுமையான விஷயம் வேறு எதுவும் இல்லை, ஆனால் எனக்கு வேறு வழியில்லை என்கிறார் சகீனா பேகம். எங்கே தனது மகன் வெளியே சென்றால் மீண்டும் போதை மருந்தை தேடுவானோ என்கிற அச்சம் அவரது குரலில் இருக்கிறது.
வேலை இல்லாமலும், பள்ளியைவிட்டு இடைநின்றவருமான அஸ்லான் ஹெராயினுக்கு அடிமையாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. இந்தப் பழக்கம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போதைக்காக ஷூ பாலிஷை நுகர்வதிலிருந்து துவங்கி, பின்னர் அபினி மருந்துகள் மற்றும் கஞ்சா ஆகியவை ஆகி இன்று ஹெராயினில் வந்து நிற்கிறது.
தெற்கு காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் சுர்சூ பகுதியில் வசிக்கும் அஸ்லானின் குடும்பத்திற்கு இந்த போதை பழக்கம் ஒரு பலத்த அடியாகும். 55 வயதாகும் நெல் சாகுபடியாளர் பஷீர், "எங்களிடம் இருந்த மதிப்பு மிக்க பொருட்களை எல்லாம், அது அவரது தாயின் காதணிகள் ஆகட்டும் அல்லது அவரது சகோதரியின் மோதிரம் ஆகட்டும், எல்லாவற்றையும் விற்றுவிட்டார்", என்று கூறுகிறார். அஸ்லான் அவரது ஏ டி எம் கார்டை திருடி கிட்டதட்ட 50,000 ரூபாய் அளவிற்கு அவரது கணக்கில் இருந்து எடுத்த பிறகு தான் அவருக்கு அஸ்லானின் போதை பழக்கம் பற்றி தெரிய வந்திருக்கிறது. "எங்கள் வீட்டில் தங்கியிருந்த விருந்தினர்களும் அவர்களது பணம் இங்கே காணாமல் போனதாக புகார் கூறினர்", என்று கூறுகிறார்.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தனது மகன் ஹெராயின் வாங்க 32 வயதான சகோதரியின் விரலிலிருந்து மோதிரத்தை கழற்றுவதை பஷீர் கண்டபோது தான் பிரச்சனை தீவிரத்தை உணர்ந்து இருக்கிறார். “மறுநாளே ஸ்ரீநகரில் இருக்கும் போதை மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றேன். நான் அவனை கண்மூடித்தனமாக நம்பினேன், அவன் போதைக்கு அடிமையாவான் என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை", என்று கூறுகிறார்.




