கடந்த வருடத்தில் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து பெய்த மழை, நான்கு மாத கடின உழைப்பை ஒஸ்மனாபாத்தின் விவசாய நிலங்களில் அழிக்க போதுமானதாக இருந்தது. கோபத்துடன் மேகங்கள் குவிந்து அக்டோபர் மாதத்தில் கடுமையான மழையை பொழிந்தது. புயல் வீடுகளின் கூரைகளை சுற்றியடித்தது. கால்நடைகளை அழித்தது. பல மைல் அளவுக்கு பயிரை இல்லாமலாக்கியது.
அவற்றில் சிலவை ஷார்தாவுக்கும் பாண்டுரங் குண்டுக்கும் உரியவை. இருவரும் ஒஸ்மனாபாத்தின் மகாலிங்கி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள். “நாங்கள் விதைத்த சுமார் 50 குவிண்டால் சோயாபீனை இழந்துவிட்டோம்,” என்கிறார் 45 வயது ஷார்தா. “எங்களின் நிலத்தில் முழங்காலளவு தண்ணீர் தேங்கியிருந்தது. அது எல்லாவற்றையும் அழித்துவிட்டது.”
இந்திய வானிலை மையத்தின் தரவுகளின்படி, ஒஸ்மனாபாத் மாவட்டம் அக்டோபர் 2020-ல் 230.4 மிமீ மழையை பெற்றிருக்கிறது. அந்த மாவட்டத்தின் மாத சராசரியைவிட 180 சதவிகிதம் அதிகம் அது.
பாண்டுரங் மற்றும் ஷார்தா போன்ற விவசாயிகள்தான் அதிக பாதிப்புக்கு உள்ளாகினர்.
மொத்த விளைச்சலையும் மழை அழிப்பதை 50 வயது பாண்டுரங் ஏதும் செய்யமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்தபோது, சோயாபீனின் குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.3880 ஆக இருந்தது. அவரும் ஷார்தாவும் 1,94,000 ரூபாய் மதிப்பிலான பயிரை இழந்திருந்தனர். “அதில் 80,000 ரூபாய் முதலீடு செய்திருந்தோம்,” என்கிறார் ஷார்தா. “விதைகள், உரம், பூச்சிக்கொல்லி என எல்லாவற்றையும் வாங்க வேண்டியிருந்தது. நான்கு மாதங்கள் முதுகொடிய நாங்கள் விதைப்பதற்கு செலுத்திய உழைப்பை கூட நான் கணக்கில் சேர்க்கவில்லை. திடீரென மழை பொழிந்தது. நாங்கள் எதுவும் செய்ய முடியவில்லை.”











