லட்சக்கணக்கான பேருக்கான குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகளை துண்டித்து தீவிரமான சுகாதார கேடுக்குள்ளாகும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறார்கள். காவல்துறை மற்றும் துணை ராணுவம் ஆகியவற்றின் தடுப்புகள் போராட்டப்பகுதியை முற்றிலுமாக துண்டித்து துப்புரவு வசதிகள் இல்லாத ஆபத்தான சூழலுக்குள் விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர். போராடும் விவசாயிகளை ஊடகவியலாளர்கள் சந்திக்க முடியாமல் ஆக்கியிருக்கிறார்கள். கூடவே இருந்த 200 விவசாயிகளை உடல்நலக்குறைவால் சாகக் கொடுத்த கூட்டத்தை இரண்டு மாதங்களாக தண்டித்துக் கொண்டிருக்கின்றனர். உலகின் வேறெங்கு இவை நடந்திருந்தாலும் காட்டுமிராண்டித்தனமாகவும் மனித உரிமைகள் மீதான தாக்குதலாகவும் பார்க்கப்பட்டிருக்கும்.
ஆனால் நம் அரசும் ஆளும்வர்க்கமும் அதை விட முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தன. உதாரணமாக, பூமியிலேயே அற்புதமான நாட்டின் பெயருக்கு களங்கம் விளைவிக்க முடிவெடுத்திருக்கும் சர்வதேச தீவிரவாதிகளான ரைஹானா மற்றும் க்ரெட்டா துன்பர்க் போன்றாரின் கூட்டுச்சதியை அழிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
ஒரு புனைகதையாக இருந்திருந்தால் நகைச்சுவையாக இருந்திருக்கும். யதார்த்தத்தில் நடப்பதால் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது.
இவை எல்லாம் அதிர்ச்சியாக இருந்தாலும் ஆச்சரியமாக இருக்க முடியாது. ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்ற கோஷத்தில் ஈர்க்கப்பட்டவர்களுக்கு இப்போது உண்மை புரிந்திருக்கும். அதிகபட்ச வன்முறையும் கோரமான நிர்வாகமும்தான் உண்மையாக இருக்கிறது. வருத்தத்துக்குரிய விஷயம் என்னவெனில் பிற நேரங்களில் உயர எழும் குரல்கள் கவனமாக இவ்விஷயத்தில் அமைதி காப்பதுதான். சில குரல்கள் இத்தகைய சட்டங்களை ஆதரிக்கவும் கொண்டாடவும் மட்டும் வருகின்றன. இத்தகைய தினசரி ஜனநாயக தாக்குதலை அவர்களும் ஏற்பதில்லை என நீங்கள் நினைப்பீர்கள்.
மத்திய அமைச்சரவையின் ஒவ்வொரு உறுப்பினரும் நடந்து கொண்டிருக்கும் விவசாயப் போராட்டத்தை தீர்த்து வைக்க தடையாக இருப்பது எது என்பதை தெளிவாக தெரிந்தே வைத்திருக்கிறார்கள்.








