33 வயது ஆரெத்தி வாசுவிற்கு எதிராக 23 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 55 வயதான அவரது தாயார் ஏ.சத்யவதியின் மீது எட்டு வழக்குகள் உள்ளன. வாசு மீது பொய் வழக்குகள் போடப்பட்டு மூன்று முறை சிறைக்குச் சென்றுள்ளார். 2016 செப்டம்பர் முதல் இதுவரை 67 நாட்களைச் சிறையில் கழித்துள்ளார். அவரது தாய் 45 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.
“ஆர்டிஐ தான் தாக்கல் செய்தேன்,” என்கிறார் அவர்.
இதன் விளைவுகள் சாதாரணமாக இருக்கவில்லை. காவல்துறையினரின் சோதனைகள், மிரட்டல், வீடுகளிலிருந்து மக்களை இழுத்துச் செல்வது, தடுப்புக் காவலில் வைப்பது ஆகியவை இப்போது துண்டுருவில் பொதுவாக உள்ளன. நரசப்பூர் மண்டலத்தின் கே. பெதாபுடி, பீமாவரம் மண்டலத்தின் ஜோன்னலாகருவு கிராமங்களிலும் இதே நிலைதான். மேற்கு கோதாவரி மாவட்டத்தில்தான் இம்மூன்று கிராமங்களும் உள்ளன.
இக்கிராமத்தின் சிறு விவசாயிகள், மீனவர்கள், கூலித் தொழிலாளர்கள் போன்றோர் கோதாவரி மெகா கடல்வாழ் உயிரின உணவுப் பூங்கா தனியார் நிறுவனத்திற்கு (GMAFP) எதிராகப் போராடி வருகின்றனர். இப்பகுதியின் நீர் மற்றும் காற்றை இத்திட்டம் மாசுப்படுத்துவதோடு, தங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என அவர்கள் கருதுகின்றனர். மீன், இறால், நண்டு போன்ற கடல்வாழ் உயிரினங்களை பதப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதை உணவுப் பூங்கா நோக்கமாக கொண்டுள்ளது. “தினமும் குறைந்தது 1.5 லட்சம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடும் என்று” GMAFP க்கு எதிரான போராட்டக் குழு, புகார் கூறுகிறது. “தினமும் சுமார் 50,000 லிட்டர் தண்ணீர் கழிவுகளை வெளியேற்றுவார்கள்” என்று அவர்கள் சொல்கின்றனர். கொண்டேரு வடிகாலுக்கு அனுப்பி வைக்கப்படும் கழிவுகள் இம்மாவட்டத்திலிருந்து கடலுக்கு செல்லும்.










