“எனது சொந்தப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல இந்த இயக்கம் எனக்குக் கற்றுக் கொடுத்தது. இது எங்களுக்கு மரியாதை கொடுத்துள்ளது. ‘எங்கள்’ என ரஜிந்தெர் கவுர் சுட்டுவது அவரைப் போலவே, 2020 செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிரான இயக்கத்தில் பங்குபெற்ற பெண்களைத்தான். பஞ்சாபில் உள்ள பாட்டியாலா மாவட்டத்தைச் சேர்ந்த 49 வயது விவசாயியான ரஜிந்தர், அடிக்கடி சிங்குவுக்கு 220 கிலோமீட்டர் தூரம் பயணித்து, போராட்டக் களத்தில் உரையாற்றியிருக்கிறார்.
சொந்த கிராமமான டான் கலனில் உள்ள அவரின் பக்கத்து வீட்டுக்காரர் தில்லி-ஹரியானா எல்லையில் உள்ள சிங்குவில் 205 நாட்கள் கழித்தார். "நான் விளைவிக்காத காலம் என ஒன்று என் நினைவிலேயே இல்லை," என்று அவர் கூறுகிறார். "நான் அறுவடை செய்த ஒவ்வொரு பயிரிலும், எனக்கு வயதானது." ஹர்ஜீத் 36 ஆண்டுகளாக விவசாயியாக இருக்கிறார். “ஆனால் இதுபோன்ற ஒரு இயக்கத்தை நான் பார்த்ததும், அதில் பங்கேற்பதும் இதுவே முதல் முறை,” என்கிறார் அவர். "குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் போராட்டத்திற்கு வருவதை நான் கண்டேன்."
நாட்டின் தலைநகரின் எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டு, சர்ச்சைக்குரிய சட்டத்தை திரும்பப் பெறுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். முக்கியமாக பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள், நவம்பர் 2020 தொடங்கி ஒரு வருடத்துக்கு அங்கு முகாமிட்டிருந்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகளின் போராட்டம் சமீபத்தில் நடந்த மிகப்பெரிய மக்கள் இயக்கங்களில் ஒன்றாகும்.
பஞ்சாபைச் சேர்ந்த பல பெண்கள், போராட்டத்தின் முன்னணியில் இருந்தனர். அப்போது அவர்கள் அனுபவித்த ஒற்றுமை இப்போதும் தொடர்கிறது என்றும், அங்கு அவர்கள் கண்டறிந்த தைரியமும் சுதந்திரமும் தற்போது வலுப்பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்கள். “நான் அங்கு இருந்தபோது வீட்டில் இல்லாத உணர்வு வந்ததே இல்லை. இப்போது நான் திரும்பி வந்துவிட்டேன். போராட்டத்தை இழந்த உணர்வில் இருக்கிறேன்,” என்கிறார் மான்சா மாவட்டத்தைச் சேர்ந்த 58 வயதான குல்தீப் கவுர்.
இதற்கு முன், புத்லாடா தாலுகாவில் உள்ள ரலி கிராமத்து வீட்டில் பணிச்சுமை அவரை பாதித்திருந்தது. “இங்கே நான் எல்லா விஷயங்களையும் செய்ய வேண்டும். அல்லது நாங்கள் விருந்தினர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். அங்கே நான் சுதந்திரமாக இருந்தேன்,” என்கிறார் குல்தீப். போராட்டத் தளங்களில், சமூக சமையலறைகளில் தன்னார்வத் தொண்டு செய்தார். தன் வாழ்நாள் முழுவதும் அங்கேயே வேலை செய்திருக்க முடியும் என்கிறார். "நான் பெரியவர்களை பார்த்து, என் பெற்றோருக்கு சமைப்பதாக நினைத்துக் கொண்டேன்."












