2020-ம் ஆண்டில், கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, கிராமத்திலிருந்து எனக்குச் செய்தி வந்தது. என் தாத்தா கீழே விழுந்ததில் அவரது கால் உடைந்துவிட்டது. அங்குள்ள சமூக சுகாதார மையத்துக்கு அரிதாகவே மருத்துவர் வருவார். மேலும் கொரோனா காரணமாக அருகிலுள்ள தனியார் மருத்துவ மையங்களும் மூடப்பட்டுவிட்டன. என் குடும்பத்தினர் உடைந்த காலில் பிளாஸ்திரி போட்டு, அவரை வீட்டில் கவனித்துக் கொண்டனர். ஆனால் கடுமையான காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டார். வலி தாங்க முடியாமல் கதறினார். அவர் மேலும் பலவீனமடைந்தார். அந்த ஆண்டின் மே மாத இறுதியில் அவர் தனது கடைசி மூச்சை விட்டார்.
அச்சம்பவம் நேர்ந்தபோது நான் மும்பையில் இருந்தேன். திடீரென வாழ்க்கை ஸ்தம்பித்ததால், புயல் தாக்கியது போல் இருந்தது. தொற்றுநோய் பற்றிய பயம் ஒருபுறம் வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால் தெருக்களில் போலீஸாரின் தடியடி மழை பெய்தது. வாழ்வாதாரம் நிறுத்தப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். நான் மும்பையில் தங்கினேன். ஏனென்றால் நான் பிழைப்புக்காக காய்கறிகளை விற்றுக் கொண்டிருந்தேன். நாங்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டோம். ஆனால் என் தாத்தா இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டதும், உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள எனது கிராமத்திற்கு உடனடியாக செல்ல விரும்பினேன். எனக்கு அவருடன் உணர்வுப்பூர்வமான உறவு இருந்தது. தவிர, என் அம்மாவைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை.
அவை கடினமான காலங்கள். நாடு முழுவதிலுமிருந்துவந்தச் செய்திகள் உலுக்கியது. வீடு நோக்கி நடந்து கொண்டிருந்த சில தொழிலாளர்கள் களைப்பினால் ரயில் தண்டவாளத்தில் தூங்கினர். ரயில் வந்து அவர்கள் மீது ஏறி, அவர்களை நசுக்கியது. ஒரு தாய், உணவும் தண்ணீரும் இன்றி தன் பாலூட்டும் குழந்தையைக் கைகளில் வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தார். தாத்தா இறந்த பிறகு, வீட்டிற்குச் செல்வதற்கான ரயில்களைப் பற்றி விசாரிக்க, எனது பைகளை எடுத்துக்கொண்டு அந்தேரிக்கு (மேற்கு) அருகிலுள்ள ரயில் நிலையத்திற்குச் சென்றேன். அலகாபாத் செல்லும் ரயில் ஓடவில்லை என்று அங்கு தெரிந்து கொண்டேன். வாரணாசியில் ரயிலில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. உத்தரப்பிரதேசத்துக்கு செல்ல வேண்டிய ரயில் அதற்கு பதிலாக ஒடிசாவிற்கு புறப்பட்டது. எனது கிராமத்தை அடைய நான் அலகாபாத்தை [இப்போது பிரயாக்ராஜ் என்று அழைக்கப்படுகிறது] தாண்டி 70 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருந்தது. இந்தச் சம்பவங்கள் ஏற்கனவே பலவீனமாக இருந்த என் மன உறுதியைக் குலைத்துவிட்டது. டாக்ஸியில் பயணம் செய்யலாம். ஆனால் அதற்கு 40,000 முதல் 50,000 ரூபாய் வரை செலவாகும். என்னிடம் அவ்வளவுப் பணம் இல்லை. அதனால் வீட்டிற்கு செல்லும் எண்ணத்தை முழுவதுமாக கைவிட்டேன். வேறு வழியில்லை.























