"நாங்கள் மண்ணில் வாழ்பவர்கள், கான்கிரீட்கூட்டிலோ அல்லது உயரமான கட்டிடங்களுக்குள்ளோ அல்ல" என்கிறார் லக்ஷ்மி கெய்க்வாட். இப்போது, அவர் பழங்குடியினர் குக்கிராமமான பிரஜாபுர்பாதாவில் உள்ள இரண்டு ஏக்கர் விவசாயநிலத்திற்கு ஈடாகஒதுக்கப்பட்ட 269 சதுர அடி பிளாட்டில். 12ஆவது மாடியில் அமர்ந்திருக்கிறார்.
“எப்போதெல்லாம் நான் கீழே பார்க்கிறேனோ எனக்கு பயமாக உள்ளது. நான் கீழே விழுந்து விடுவேனோ எனத் தோன்றுகிறது. எங்களால் இங்கு இருக்க முடியவில்லை. என்னால் சுதந்திரமாக இங்கு நடக்கக் கூட முடியவில்லை" எனக் கண்ணீருடன் தெரிவித்தார் 75 வயதான லஷ்மி.
மும்பை குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட அவருடைய சிறிய வீடு அந்தேரி நகரின் மேற்குப் பகுதியான சக்கலாவில் அமைந்துள்ளது. இது புறநகர் ஆரே பால் காலனியில் உள்ள பிரஜாபுர் பாதாவிலிருந்து 3.7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த பால் காலனி 1949ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டது. இது கால்நடைகளுக்கான 3160 ஏக்கர் மேய்ச்சல் பகுதிகளுடன் பால் பண்ணையுடன் அமைந்துள்ளது. இங்கு 1990ஆம் ஆண்டிலிருந்து 27 ஆதிவாசி சமூகங்களைச் சேர்ந்த 8000 மக்கள் வசித்து வருகின்றனர்.
மொத்தம் 300 பேர் உள்ள 70 கோக்னா ஆதிவாசிக் குடியிருப்புகளில் ஒரு குடும்பம் தான் கெய்க்வாட்டின் குடும்பம். மும்பை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏப்ரல் 2017ஆம் ஆண்டு 26 ஹெக்டேர் பரப்பளவில் கூரைகள் மற்றும் கிடங்குகள் அமைக்க அவர்களது நிலத்தை எடுத்துக் கொண்டபின் அவர்கள் இங்கு தஞ்சமடைந்தனர்.
ஆரேவில் இருந்த வந்த 100 குடும்பங்களுடன் 70 குடும்பங்கள் குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் 16ஆவது தளத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 1995ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில அரசால் தொடங்கப்பட்ட குடிசை மாற்று வாரியத் திட்டம் சேரிகளில் இருந்து வரும் மக்களுக்கு 250-300 சதுர அடியில் வீடுகளை ஒதுக்கீடு செய்கிறது.






