மைய காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 அன்று, ஜுகோ-காரியனைச் சேர்ந்த 21 வயது வாஜித் அகமது அகங்கர், தன் நண்பர்களுடன் தோசாமைதானத்தில் நடைபெறும் மூன்று நாள் திருவிழாவுக்குப் புறப்பட்டார். அந்த அழகான புல்வெளியில் வெடிக்காமல் கிடந்த ஒரு ஷெல் திடீரென வெடித்தது. அதில் சிக்கிய வாஜித் சடலமாக வீட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். (’குதிரையில் சவாரிசெய்யும் இளவரசனைப்போல’ வீட்டிலிருந்து வாஜித் கிளம்பியதாக அவரின் தந்தை விவரித்தார்.) மற்ற மூவரும் படுகாயம் அடைந்தனர்.
கொண்டாட்டங்கள் துக்கமாக மாறிவிட்டன. இது, காஷ்மீரின் கடந்த காலம் அப்படியே தொடர்கிறது என்பதன் இன்னுமொரு நினைவூட்டல்.
ஓராண்டுக்கு முன்னர் இதே ஆகஸ்ட் மாதத்தில், பட்காமின் காக் வட்டாரம், சுங்லிபோரா கிராமத்தைச் சேர்ந்த முகமது அக்ரம் ஷேக், ஜஷ்-இ-தோசாவின் முக்கியத்துவத்தை என்னிடம் கூறினார். அது, 2015ஆம் ஆண்டு முதல் இந்தப் புல்வெளியுடன் தொடர்புடைய திருவிழா. ஜம்மு காஷ்மீர் அரசும் சுற்றுலாத் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்த விழாவை மேம்படுத்துகிறது.
இந்த மைதானம் ஊர் மக்களுக்கே திரும்பக் கிடைத்ததை இந்தத் திருவிழாவில் கொண்டாடுகிறார்கள் என்று அவர் விவரித்தார். ஐந்து பத்தாண்டுகளாக மைதானத்தை இராணுவத்தின்வசம் இருந்தது. சூட்டுப் பயிற்சித் தளமாக இதைப் பயன்படுத்திய இராணுவம், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 2014 இல் இடத்தை காலிசெய்தது.
சாவு பயமில்லாமல் காயத்துக்கோ மிரட்டலுக்கோ அஞ்சாமல் அலைந்துதிரிவதற்கான சுதந்திரத்தை ஊர்மக்கள் கொண்டாடினார்கள். அலைகுடிச் சமூகம் என்பதால் தங்களின் வாழ்வாதாரத்துக்காகவும்கூட! புல்வெளியை காலிசெய்வதை நிம்மதிப் பெருமூச்சுடன் அவர் விவரித்தார்.
ஆனால், இந்த சுதந்திரம் என்பது எவ்வளவு மாயையானது, அது இராணுவமயமாக்கத்தின் மூலம் நிலக்காட்சியை மாற்றியமைக்கும், நிலத்தையே முழுவதுமாக நம்பியிருக்கும் மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரத்தை அது எந்த அளவுக்கு கடுமையாக பாதிக்கும் என்பதை 2018 ஆகஸ்ட் சம்பவம் காட்டிவிட்டது.









