பஜார்திகாவின் குறுகலானத் தெருக்களின் விசைத்தறி சத்தங்களுக்கு நடுவே வாசிம் அக்ரம் இயங்கிக் கொண்டிருக்கிறார். 14 வயதிலிருந்து அவர், பல தலைமுறைகள் பழமையான அதே இரண்டு மாடி சிமெண்ட் வீட்டில்தான் நெசவு வேலை செய்து கொண்டிருக்கிறார். பனாரஸ் புடவைகள் நெய்யும் அவர்களின் குடும்ப வழக்கம் அது.
அவரின் தாத்தாவும் பாட்டனாரும் கைத்தறிகளில் வேலை பார்த்ததாக சொல்கிறார். ஆனால் அவரின் தலைமுறை, விசைத்தறி கற்றுக் கொண்டது. “2000மாம் வருடத்திலெல்லாம் இங்கு விசைத்தறி வந்து விட்டது,” என்கிறார் 32 வயது வாசிம். “நான் பள்ளிக்குச் சென்றதில்லை. தறிகளில் வேலை பார்க்கத் தொடங்கிவிட்டேன்.”
வாரணாசியின் பஜார்திகா பகுதியில் வசிக்கும் 1000 நெசவாளர் குடும்பங்கள் இணைந்து நெசவாளர் சமூகமாக வேலை பார்க்கின்றனர். உணவுப்பொருட்கள், கடன்கள், வேலைகள் முதலிய விஷயங்களைப் பெறுவதில் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்கின்றனர். அனைவருக்கும் வேலை கிடைப்பதை உறுதி செய்கின்றனர்.
மார்ச் 2020-ல் ஊரடங்கு தொடங்கியதும் தறிகளின் சத்தம் ஓய்ந்தது. தறி ஓட்டுபவர்களுக்கு வேலை இல்லாமல் போனது. புடவை ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டன. பட்டறைகள் மூடப்பட்டன. “என்னுடைய மொத்த சேமிப்பும் ஊரடங்கின் முதல் 2-லிருந்து 4 மாதங்களில் காலியாகி விட்டது என்கிறார் வாசிம். “நான் (மாநிலம் நடத்தும்) நெசவாளர்கள் சேவை மையத்துக்குச் சென்று எங்களுக்கென ஏதேனும் அரசுத் திட்டம் (அந்த சூழலுக்கு) இருக்கிறதா எனக் கேட்டேன். எதுவுமில்லை.”







