“யமுனையுடன் எங்களுக்கு உறவு உண்டு. எப்போதும் நாங்கள் ஆற்றுக்கு அருகேதான் இருந்திருக்கிறோம்.”
விஜேந்தர் சிங்தான் ஆற்றுடனான தன் குடும்பத்தின் பிணைப்பை இவ்வாறு குறிப்பிடுகிறார். தில்லியின் யமுனைக்கரையின் சமவெளிகளில், மல்லா (படகோட்டி) சமூகத்தை சேர்ந்த அவர்கள் பல காலமாக தங்கி விளைவித்து வாழ்ந்திருந்தார்கள். 1,376 கிலோமீட்டர் நீள ஆற்றின் 22 கிலோமீட்டர் நீளம் தேசத்தின் தலைநகரினூடாக பயணிக்கிறது. ஆற்றின் சமவெளி பரப்பு மொத்தம் 97 சதுர கிலோமீட்டர் அளவு கொண்டது.
விஜேந்தர் போன்ற 5,000-க்கும் மேலான விவசாயிகள் 99 வருட பட்டா உரிமையை இந்த நிலத்துக்கு வைத்திருந்தனர்.
பிறகு புல்டோசர்கள் வந்தன.
ஜனவரி 2020-ம் ஆண்டின் கொடும் பனிக்காலத்தில் நகராட்சி அதிகாரிகள் அவர்களின் வசிப்பிடங்களை பயிர்களோடு சேர்த்து ஓர் உயிரியல் பூங்கா கட்டும் பணிக்காக அழித்தனர். அருகே இருந்த கீதா காலனியில் அவசரவசரமாக குடும்பத்தை இடம்பெயர்த்து வாடகைக்கு தங்க வைக்க வேண்டிய நிலை விஜேந்தருக்கு ஏற்பட்டது.
ஒரே நாளில் அந்த 38 வயது விவசாயியின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டது. மனைவியும் 10 வயதுக்குட்பட்ட மகன்கள் மூன்று பேரும் கொண்ட குடும்பத்துக்காக நகரத்தில் வாகன ஓட்டியாக அவர் பணியாற்றுகிறார். இந்த நிலைக்கு ஆளானது அவர் மட்டுமல்ல. வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்ட பிறர் பெயிண்டர்களாகவும் தோட்டக்காரர்களாகவும் காவலாளிகளாகவும் மெட்ரோ ரயில் நிலையத் தூய்மைப் பணியாளர்களாகவும் பணியாற்றும் நிலையை எட்டினர்.
“லோஹா புல் பகுதியிலிருந்து ITO பகுதி வரையிலுள்ள சாலை வரை நீங்கள் ஏகப்பட்ட கச்சோரி தின்பண்ட வியாபாரிகளை பார்க்கலாம். அவர்கள் அனைவரும் விவசாயிகள்தான். நிலம் பறிபோனபின், ஒரு விவசாயி என்ன செய்ய முடியும்?” எனக் கேட்கிறார் அவர்.










