”பள்ளிக்கு அவர்களை வரவழைப்பதே ஒரு சவால்.”
தலைமை ஆசிரியர் சிவ்ஜீ சிங் யாதவின் வார்த்தைகள் அவரது 34 வருட அனுபவத்தின் கனத்திலிருந்து வெளிவந்தவை. ‘மாஸ்டர்’ என மாணவர்களால் அழைக்கப்படும் யாதவ், தப்லி சபோரியில் இருக்கும் ஒரே பள்ளியை நடத்துகிறார். அசாமின் மஜுலி மாவட்டத்தின் பிரம்மபுத்திர ஆற்றில் இருக்கும் தீவில் வசிக்கும் 63 குடும்பங்களின் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர்.
தோனகான ஆரம்பப் பள்ளியின் ஒரே வகுப்பறையில் இருக்கும் ஒரு மேஜையில் அமர்ந்திருக்கும் சிவ்ஜீ சுற்றிப் பார்த்து மாணவர்களைப் பார்த்து புன்னகைக்கிறார். 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 6லிருந்து 12 வயது குழந்தைகளின் 41 பிரகாச முகங்கள் அவரை பார்க்கின்றன. “போதிப்பதும் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவதும்தான் உண்மையான சவால்,” என்னும் அவர், “அவர்கள் ஓடி விடவே விரும்புகிறார்கள்,” என்றும் கூறுகிறார்.
இந்தியக் கல்வி அமைப்பை அலசுவதற்கு முன், அவர் நிறுத்தி, மூத்த மாணவர்களில் சிலரை அழைக்கிறார். மாநில அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரகம் அனுப்பிய அசாமிய, ஆங்கில கதைப்புத்தகக் கட்டை பிரிக்கச் சொல்கிறார். புதிய புத்தகங்கள் கொடுக்கும் பரவசம் குழந்தைகளின் கவனத்தை அவற்றில் இருக்க வைத்து அவர் பேசுவதற்கான அவகாசத்தை வழங்கும் என தெரிந்திருந்தார்.
“கல்லூரி பேராசிரியருக்குக் கொடுக்கும் ஊதிய அளவுக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியருக்கு அரசாங்கம் கொடுக்க வேண்டும். நாங்கள்தான் அடிப்படையை கட்டுகிறோம்,” என்கிறார் அவர் அடிப்படைக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி. ஆனால் பெற்றோர் ஆரம்பக் கல்வியை முக்கியமாக கருதாமல் உயர்கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் எனவும் அவர் சொல்கிறார். தவறான அக்கருத்து மாற்றப்பட வேண்டும் என்கிறார்.

















