“எங்களுக்கு இங்கு ஒரு வங்கி கிளை வேண்டும். ஒரு சிலரிடம் மட்டுமே வங்கி கணக்கு உள்ளது”. இந்த அரிதான கிராம பஞ்சாயத்தின் தலைவர் சமீபத்தில் தான் தனது பெயரில் கையெழுத்து போட கற்றுக்கொண்டார் என்ற செய்தி கேரளாவிற்கு கொஞ்சம் அதிசயமான விஷயமே. தங்களால் வங்கி கணக்கை இயக்க முடியும் என்ற நம்பிக்கை அந்த பெண்களிடம் இருக்கிறது. தங்களது நடவடிக்கைகள் மற்றும் சேமிப்பு மூலம் ஐந்து லட்ச ரூபாய் வரை இங்குள்ள சிடிஎஸ் குழுக்கள் திரட்டியுள்ளது. இந்த பணம் அனைத்தும் பொதுத்துறை வங்கியின் வைப்பு நிதியில் போடப்பட்டுள்ளது. இவை எதுவும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படாது.
அவர்களுக்கு எது மிகவும் முக்கியம்: குழு விவசாயமா? அல்லது தனிநபர் விவசாயமா? இரண்டிற்கும் பங்குள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.
“குழு விவசாயமே நல்லது” என்கிறார் ரமனி. சுற்றியுள்ளவர்களும் அதை ஆமோதிக்கிறார்கள். ஒன்றாக பணியாற்றுவதால், ஒரு நபர் தடுமாறினாலும் அவருக்கு உதவி செய்ய மற்றவர்கள் வருவார்கள். “தனிநபர் விவசாயம் செய்யவும் நான் விரும்புகிறேன்” என்கிறார் மற்றொரு பெண். இதிலும் வெகுமதி உள்ளது. ஆனால் எங்கள் குடும்பத்திற்கு உணவளிக்க இந்த முறை சிறந்ததாக உள்ளது. குழுவாக இருப்பதால், விவசாயத்தை மீறி மற்ற சில விளைவுகளும் உள்ளது. உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கிறார்கள். இது குடும்ப வாழ்க்கையிலும் பரவியுள்ளது. இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஆகையால் நாங்கள் ஏன் இரண்டையும் சேர்த்து செய்யக்கூடாது?”
உணவு பாதுகாப்பிற்காக இந்த குழுக்கள் கையாளும் புதுமையான அணுகுமுறை குறித்து டுரோண்டோவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனன்யா முகர்ஜி விரிவாக எழுதியுள்ளார். “கேரளாவிலுள்ள 2,50,000 குடும்பஸ்ரீ பெண்கள் ஒன்றாக சேர்ந்து விவசாய கூட்டுறவை அமைத்துள்ளனர். இதன்மூலம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, பயிர் செய்து, விளைவித்த பொருட்களை தங்கள் தேவைக்கு பயன்படுத்தியது போக மீதமுள்ளதை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்கிறார்கள். இது விவசாயத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகப்படுத்துகிறது. அதோடு பெண்களை உற்பத்தியாளர்களாக உறுதிசெய்வதோடு, உற்பத்தி, விநியோகம் மற்றும் உணவு நுகர்தல் மீது அவர்களுக்கு கட்டுப்பாடு வந்துள்ளது.
இத்தனை சிரமமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இவை அனைத்தையும் செய்து முடித்துள்ளனர் இடமலக்குடி பெண்கள்.
“உங்களை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்? உற்பத்தியாளராகவா அல்லது தொழிலாளியாகவா அல்லது பணியாளராகவா?” என அவர்களிடம் கேட்டோம். அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்களை உற்பத்தியாளராக பார்க்கவே விரும்புகிறார்கள்.