டெல்டா சர்க்கரை ஆலையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த யாரகுண்ட்லா நாகராஜு பணியிழந்து 3 மாதங்கள் ஆகிறது. 18 வயது முதல் அங்கு எலெக்ட்ரீசியனாக அவர் வேலை செய்துள்ளார். அந்த ஆலை துவங்கப்பட்ட 1983ம் ஆண்டு முதல் அங்கு வேலை செய்தவர் தற்போது பணியிழந்துள்ளார்.
2017ம் ஆண்டு நவம்பர் கடைசி வாரத்தில் அவரும் அவருடன் பணிபுரிந்த மற்ற பணியாளர்கள் 299 பேரும் சட்டத்திற்கு புறம்பாக பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். அதில் பெரும்பாலானோர் நிலமற்ற பட்டியல் இனத்தவர். டிசம்பரில் இருந்து அவர்களை வேலைக்கு வரவேண்டாம் என சர்க்கரை ஆலை நிர்வாகம் கூறிவிட்டது. அதற்கான அவகாசம் கூட வழங்கப்படவில்லை. “எங்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளமும் வழங்கப்படவில்லை. தற்போது நஷ்டத்தில் இயங்குகிறது என்று கூறி நிறுவனத்தை மூடுகிறார்கள்“ என்று நாகராஜு கூறுகிறார். அவரை நான் நவம்பர் மாதத்தில் சந்தித்தேன். ஆலையில் இவர் தொழிலாளர் யூனியனின் தலைவர். அந்த யூனியன், அகில இந்திய வர்ததக யூனியன் காங்கிரசின் உறுப்பாக உள்ளது.
நவம்பர் 26ம் தேதி வேலையை இழந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆலை முன் தற்காலிக பந்தல் அமைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழங்கப்படாத இரு மாத ஊதியத்தையும், பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 24 மாத சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கையாக இருந்தது. இதில் பெரும்பாலான தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்களில் வருமானம் ஈட்டும் ஒரே நபராக உள்ளனர். வாரக்கணக்கில் ஆலையின் மூடிய கதவுகளுக்கு வெளியே போராடுவதால் குடும்பம் ஓட்டக் கஷ்டப்படுகிறார்கள். நிரந்தரத் தொழிலாளியான நாகராஜு, மாதம் ரூ.14 ஆயிரம் சம்பளம் பெற்றார். அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டபோது, சேமிப்பை வைத்து குடும்பம் நடத்தினார். அவரது மனைவி விவசாயக் கூலித்தொழிலாளி. மகன் ஆட்டோ ஓட்டுகிறார்.











