ஜூலை 2021-ல் மழை வெள்ள நீர் வீட்டுக்குள் நுழையத் தொடங்கியதும், உடைமைகளை விட்டுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினார் ஷுபாங்கி காம்ப்ளே. வெளியேறுகையில் வேகமாக இரண்டு நோட்டுப் புத்தகங்களை எடுத்துக் கொண்டார்.
பல வாரங்களுக்கும் மாதங்களுக்கும் 172 பக்கங்களைக் கொண்ட புத்தகங்கள் இரண்டும் பல வாழ்க்கைகளை அவர் காப்பாற்ற உதவின.
அச்சமயத்தில்தான் அர்ஜுன்வாட் வசித்த மகாராஷ்டிராவின் கொல்ஹாப்பூர் மாவட்டம் இன்னொரு பேரிடரையும் சந்தித்துக் கொண்டிருந்தது. கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. ஷுபாங்கி எடுத்த நோட்டுப் புத்தகங்களில் கோவிட் பாதிப்பு கொண்டிருந்த குடும்பங்கள், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், தொடர்பு எண்கள், முகவரிகள், பாதிப்புப் தகவல்கள் யாவும் அழகாக எழுதப்பட்டிருந்தன.
“கிராமத்தில் நடத்தப்பட்ட கோவிட் பரிசோதனை முடிவுகள் முதலில் எனக்குத்தான் வரும்,” என்கிறார் 33 வயது சுகாதார செயற்பாட்டாளர். இந்தியாவின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் 2005ம் ஆண்டில் நாடு முழுக்க நியமனம் செய்யப்பட்ட லட்சக்கணக்கான பெண் சுகாதாரப் பணியாளர்களில் அவரும் ஒருவர். அவரது குறிப்புகள், ஷிரோர் தாலுகாவிலுள்ள வெள்ள நிவாரண முகாமுக்கு இடம்பெயர்ந்திருக்கும் கோவிட் உறுதி செய்யப்பட்ட கிராமவாசியை அடையாளம் காண உதவும். 5,000 பேருக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கும் சூழல்.
”வெள்ளத்தின் காரணமாக பல மக்களின் செல்பேசிகள் அணைக்கப்பட்டிருக்கும். அல்லது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும்,” என்கிறார் அவர். 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தாய் தெர்வாதின் வீட்டுக்கு இடம்பெயர்ந்த ஷுபாங்கி, உடனே குறிப்புகளில் தேடி, முகாமில் இருக்கும் வேறு சிலரது தொடர்பு எண்களை கண்டுபிடித்தார். “எப்படியோ ஒருவழியாய் நோயாளியை கண்டுபிடித்தேன்.”






















