அந்தத் தொலைபேசி அழைப்புக்கு பதிலே வரவில்லை. கடமையே கண் என்கிறபடி 30 நொடிகளுக்கு தானாக ஒலித்தது, ஒரு பதிவுசெய்யப்பட்ட விளம்பரம். அது, ”கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கமுடியும்… உங்கள் கைகளை தினமும் சோப்பு போட்டு கழுவவும். யாராவது நோய்வாய்ப்பட்டு இருந்தால் அவர்களிடமிருந்து ஒரு மீட்டர் தொலைவுக்கு விலகி இருக்கவும்.”என்பதே!
இரண்டாவது முறையாக நான் பாலாசாகேபை அழைத்தபோது, தொலைபேசி அறிவுறுத்தலுக்கு நேர்மாறாக அவர் நடந்துகொண்டிருந்தார். மேற்கு மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் உள்ள வயல் ஒன்றில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தார். " இங்கே எல்லோரும் கொரோனா வைரசால் அச்சம் அடைந்துள்ளனர். ஒரு நாள், ஒரு பெண் அழுது அரற்றியபடி இருந்தாள்.. தனக்கு அதனால் பாதிப்பு ஏற்பட்டுவிடும்; தன் குழந்தைக்கும் அது தொற்றிக்கொள்ளும் என்று அவள் கவலைப்பட்டாள்." என்றார் பாலா சாகேப்.
39 வயதான கெட்கர், ஜி.டி. பாபு லேட் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளராகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். மகாராஷ்டிரத்தில் தொடர்ச்சியாக இயங்கிவரும் ஆலைகளில், இதுவும் ஒன்று. சர்க்கரையானது ‘இன்றியமையாத பொருள்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பிரதமர் நரேந்திரமோடியால் மார்ச் 24 அன்று அறிவிக்கப்பட்ட நாடு முடக்கத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு விலக்கு கிடைத்தது. அதற்கு ஒரு நாள் முன்னர், மாநிலத்தின் எல்லைகளை மூடவும் மாநிலங்களுக்கு இடையிலான பயணத்துக்கு தடைசெய்தும் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆணையிட்டிருந்தார்.
மாநிலத்தில் மொத்தம் 135 சர்க்கரை ஆலைகள் உள்ளன; இவற்றில், 72 கூட்டுறவு ஆலைகளும் 63 தனியார் ஆலைகள் அடங்கும் என்கிறார், மாநில கூட்டுறவு அமைச்சர் பாலாசாகேப் பாட்டீல். " இந்த சர்க்கரை ஆலைகளில் 56 ஆலைகள் மார்ச் 23 அன்று மூடப்பட்டன. மீதமுள்ள 79 ஆலைகள் இயங்குகின்றன. இந்த ஆலைகளுக்கு வரக்கூடிய கரும்பு இன்னும் வயல்களில் வெட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. சில ஆலைகள் மார்ச் கடைசிக்குள் கரும்புவெட்டை முடித்துவிடும்; மற்றவை ஏப்ரல் கடைசிவரை தொடரும்.” என்றும் தொலைபேசியில் அவர் என்னிடம் கூறினார்.
ஒவ்வொரு சர்க்கரை ஆலைக்குமென குறிப்பிட்ட பரப்பளவு கரும்பு வயல்கள் உள்ளன. ஆலையால் பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள் விளைந்த கரும்புகளை வெட்டி, சர்க்கரையைப் பிழிந்தெடுக்க அவற்றை ஆலைக்கு கொண்டுசேர்க்க வேண்டும். இந்த தொழிலாளர்களை ஒப்பந்தகாரர்கள் மூலம் ஆலைகள் வேலைக்கு அமர்த்துகின்றன.
தொழிலாளர்களுக்கு அடையாளமாக முன்பணம் தந்து அவர்களை உறுதிப்படுத்திக் கொள்வதாகச் சொல்கிகிறார், பாராமதிக்கு அருகில் உள்ள சத்ரபதி சர்க்கரை ஆலையின் ஒப்பந்தகாரரான அனுமந்த் முண்டே. “பருவ காலம் முடியப்போகையில் இவர்கள் கரும்புவெட்டுக்கு வருகிறார்கள் என்பதை நாங்கள் உறுதிசெய்தாக வேண்டும்" என்றும் அவர் கூறுகிறார்.








