குடும்பத்துக்கான உணவுப் பொருட்களை வாங்க நிஷா யாதவ் வழக்கமான தூரத்தையும் தாண்டி கடந்த ஒரு மாதமாக நடந்து கொண்டிருக்கிறார். அவர் வசிக்கும் பகுதியிலிருக்கும் பெட்டிக்கடை அவருக்கு எதையும் விற்பதில்லை. “அப்பா மருத்துவமனைக்கு சென்றதிலிருந்து ராஜன்வாலா (கடை உரிமையாளர்) கடைக்குள் எங்களை அனுமதிப்பதில்லை,” என்கிறார் அவர்.
ஜூன் மாதக் கடைசியில் என் அப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிகிச்சை பெற்று தற்போது குணமாகிவிட்டார்,” என்கிறார் நிஷா. “வீட்டிலிருக்கும் நாங்கள் இரு வாரங்களுக்கு தனிமையில் இருந்தோம். அப்பா ஒரு மாதத்துக்கு முன்னரே சரியாகிவிட்டாலும் கடைக்குள் நாங்கள் நுழைந்தால் கொரோனா வைரஸ் பரவிவிடும் என சொல்கிறார் கடைக்காரர். ஆகவே எங்களில் ஒருவர் முழங்கால் அளவு சேற்றிலும் சகதியிலும் நடந்து ஒரு மைல் தொலைவில் இருக்கும் உறவினர்களிடமிருந்து காய்கறிகள் வாங்கி வர வேண்டியிருக்கிறது.”
ஆறு வருடங்களுக்கு முன் பதினோறாம் வகுப்பு படிப்பை நிறுத்திய நிஷாவுக்கு 24 வயதாகிறது. உத்தரப்பிரதேசத்தின் குஷி நகர் மாவட்டத்திலுள்ள ஹதா ஒன்றியத்தின் சோஸா மதியா கிராமத்தில் வசிக்கிறார். கோரக்பூர் டவுனிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அவரது கிராமம் கடுமையான மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
”என்னுடைய மாமாவும் அத்தையும் எங்களுக்கான பொருட்களை வாங்கி வைப்பார்கள். பிறகு நாங்கள் பணம் கொடுத்துவிடுவோம்.” பேசிக் கொண்டிருக்கும்போது கூட தன் சல்வாரை மூன்று மடிப்பு மடித்துக் கொண்டிருந்தார் நிஷா. அவருடைய வீட்டுக்கு மழை நீரின் ஊடாக நடந்து செல்லவிருக்கிறார். மாலை தேநீருக்கு அவர் குடும்பத்திடம் சர்க்கரை தீர்ந்து போயிருந்தது.







