”நான் இறந்தால் கூட பரவாயில்லை, ஆனால் கட்டணம் கட்ட எங்களிடம் பணமில்லை,” என மரணமடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் ஹரிஷ்சந்திரா தவாரே அவரின் மனைவி ஜெயஸ்ரீயிடம் சொல்லி இருக்கிறார். 48 வயது பத்திரிகையாளரின் உடல்நிலை கோவிட் பாதித்து மோசமானது. வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் இருந்தார்.
அப்போதும் அவரின் கவலை உயிரை பற்றியதாக இருக்கவில்லை. மருத்துவமனையின் கட்டணத்தை பற்றிதான் கவலைப்பட்டார். “என்னுடன் சண்டை போட்டு கண்ணீர் விட்டார்,” என நினைவுகூருகிறார் 38 வயது ஜெயஸ்ரீ. “வீட்டுக்கு போக வேண்டுமென அவர் சொல்லிக் கொண்டே இருந்தார்.”
இருபது வருடங்களாக பத்திரிகையாளராக இருந்தும் கடந்த மார்ச் 2021ம் ஆண்டு கோவிட் பாதிப்பு ஏற்பட்டபோது ஒன்றும் செய்ய முடியவில்லை. கோவிட் தொற்று ஏற்படும் நிலையில் அவரிருக்க அவரின் வேலையே காரணம்.
மகாராஷ்டிராவின் ஒஸ்மனாபாத் மாவட்டத்தின் பல செய்தி நிறுவனங்களில் 2001ம் ஆண்டிலிருந்து செய்தியாளராக ஹரிஷ்சந்திரா பணிபுரிந்து வருகிறார். கடைசியாக அவர் மராத்தி நாளிதழான ராஜ்தர்மாவில் பணிபுரிந்தார். “கோவிட் 19-ன் இரண்டாம் அலையை பற்றிய செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்தார். ஊடகச் சந்திப்புகளில் கலந்து கொண்டார். பெரும்பாலான நேரங்களில் களத்திலிருந்து செய்திகள் சேகரித்தார்,” என்றார் ஜெயஸ்ரீ. “ஒவ்வொரு முறை அவர் வெளியே செல்லும்போதும் நாங்கள் கவலைப்படுவோம். அவருக்கு சர்க்கரை நோய் இருந்தது. சர்க்கரை அளவு அதிகம். ரத்தக்கொதிப்பும் இருந்தது. ஆனாலும் அவரின் வேலையை செய்தாக வேண்டும் எனக் கூறினார்.”
மார்ச் 22ம் தேதி தவாரேக்கு அறிகுறிகள் தென்படத் தொடங்கின. உடல் வலியும் காய்ச்சலும் இருந்தது “உடல்நிலை சரியாகாததால், நாங்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்,” என்கிறார் ஜெயஸ்ரீ. கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். “அங்கு நல்ல வசதிகள் இருக்கவில்லை. உடல்நிலையிலும் முன்னேற்றம் இல்லை,” என்கிறார் ஜெயஸ்ரீ. 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவரை சேர்க்க மார்ச் 31ம் தேதி குடும்பம் முடிவெடுத்தது.
ஆறு நாள் கழித்து ஏப்ரல் 6ம் தேதி அங்கு தவாரா மரணமடைந்தார்.









