சம்பா சாகுபடியை மிக அதிகமாக நம்பியிருக்கிறார்கள் தீராவும் அனிதா புயாவும். நெல்லும் சோளமும் பயிரிட்டிருக்கிறார்கள். அறுவடைக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அவர்கள் வேலை செய்யும் செங்கல் சூளை ஊரடங்கினால் மூடப்பட்டு விட்டதால், பயிர் விளைச்சல் மிக முக்கியமாக அவர்களுக்கு இருக்கிறது.
“போன வருடம் கூட விவசாயம் செய்து பார்த்தேன். ஆனால் மழை பெய்யாததாலும் பூச்சிகளாலும் பயிர் நாசமாகி விட்டது,” என்கிறார் தீரா. “ஆறு மாதங்களுக்கு நாங்கள் விவசாயம் செய்கிறோம். ஆனால் பெரியளவில் வருமானம் இல்லை,” என்கிறார் அனிதா.
மகுகவானின் தெற்குப்பகுதியில் வாழும் புயா ததி என்கிற புயா சமூகம் வாழும் இடத்தில் 45 வயது தீராவும் 40 வயது அனிதாவும் வசிக்கின்றனர்.
ஜார்கண்டின் பலாமு மாவட்டத்திலுள்ள சைன்பூர் ஒன்றியத்தின் கிராமத்தில் 2018ம் ஆண்டிலிருந்து குடும்பமாக குத்தகை விவசாயம் பார்த்து வருகிறார்கள். வாய்மொழி ஒப்பந்தத்தில் நிலவுடமையாளரும் குத்தகைதாரரும் விளைச்சலை சமமாக பகிர்ந்து கொள்ளும் ஏற்பாடு. விளைவதில் பெரும்பகுதியை குத்தகை விவசாயிகள் தங்களின் பயன்பாட்டுக்காக வைத்துக் கொள்வார்கள். மிச்சத்தை மட்டுமே சந்தையில் விற்பார்கள்.






