“அனைவரும் பால்கனிகளிலும் மாடிகளிலும் உணவை வளர்க்கத் தொடங்கினால், நமக்கு தேவையான உணவு கிடைத்துவிடும்.”
கிராமப்புற இந்தியாவை பற்றிய புரிதலை கொடுக்கவென அழைக்கப்பட்டிருந்த நகர்ப்புற மாணவர்களின் வகுப்பறையில் நாங்கள் இருந்தோம். மாணவரின் பேச்சு அமைதியான வெடிகுண்டு போல் விழுந்தது. அதை அப்படியே விட்டுவிட முடியாது. ஏனெனில் சரிசெய்ய முடியாத அளவுக்கான பாதிப்பை அது ஏற்படுத்தவல்லது. வகுப்பறையில் இருந்த தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு ‘அனைவரும்’ என்கிற வார்த்தைக்கு தவறான அர்த்தத்தை அது கொடுத்துவிடும். எனவே அர்த்தப்பூர்வமான ஒரு கலந்துரையாடலை உருவாக்க நாங்கள் அதை பயன்படுத்தினோம். மாடி, பால்கனி அல்லது திறந்த வெளி எதுவும் இல்லாமல் வீடுகள் இருக்கிறதா?
PARI-ன் கல்விக்கிளை, ஒரே மாதிரியான சிந்தனைகளையும் பரந்துபட்ட எடுத்துக்காட்டுகளையும் நிராகரிப்பதற்கு இத்தகைய தருணங்களை கைப்பற்ற விரும்புகிறது. PARI கட்டுரைகளை கொண்டு நகர்ப்புற பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றின் மாணவர்கள் கிராமப்புற மற்றும் விளிம்புநிலை சமூகங்களை ஆராய்ந்தறிந்து புரிந்து கொள்ள விரும்புகிறோம். அதே போல, கிராமப்புற மாணவர்கள் அவர்களின் சமூகங்களை பதிவு செய்து ஆவணமாக்கி, அவர்களின் வாழ்க்கைகளையும் உள்ளடக்கிய பாடநூல்களை தயாரிக்கும் வேலையில் உதவ விரும்புகிறோம். மரியா மோண்டெசரியை பொறுத்தவரை சமூகத்தை மாற்றி கட்டமைப்பது கல்வியை மாற்றி கட்டமைப்பதிலிருந்துதான் வரும். அப்போதுதான் நாட்டில் நிலவும் பலதரப்பட்ட யதார்த்தங்களை மாணவர்கள் கண்டு, கேட்டு, கற்று கொள்ள முடியும்.
நம் மாணவர்களை ‘உலகளாவிய குடிமக்களாக’ மாற்றுகிற அவசரத்தில் அவர்களின் சுற்றுப்புற யதார்த்தத்திலிருந்து அவர்கள் அந்நியப்படுத்தப்பட்டிருப்பதை ஆசிரியர்களாக எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. பெருநகரங்களை தாண்டி இந்தியா இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள். பல இந்தியாக்களை புறக்கணிப்பதன் மூலமும் அவற்றுக்கான இடங்களை பாடத்திட்டத்தில் நிராகரிப்பதன் மூலமும், அவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்கிற கருத்தைதான் நாம் உருவாக்குகிறோம். PARI-ன் ஆசிரியர் மற்றும் நிறுவனர் பி.சாய்நாத் சொல்கிறார்: ‘இந்தியாவின் ஒரு முழு தலைமுறை சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக வளர்ந்து கொண்டிருக்கிறது.”










