அது ஒரு சின்ன டீக்கடை. மண் சுவரால் எழுப்பப்பட்டது. அங்குத் தொங்கிக் கொண்டிருக்கும் காகிதத்தில் இந்த வார்த்தைகள் இருக்கின்றன.

அக்‌ஷரா கலை மற்றும் விளையாட்டு நூலகம்

இருப்புக்கல்லகுடி

எடமலாகுடி

கேரளாவின் இடுக்கி மலைப் பகுதியில் நூலகம் நடத்தி வரும் முதியவர் பி வி சின்னத்தம்பி.

நூலகமா? இடுக்கி மாவட்டத்தின் அடர்த்திமிகு காட்டின் நடுவிலா? இந்தியாவில் அதிகம் படித்தவர் வாழும் மாநிலமான கேரளா என்றாலும் இப்பகுதி எழுத்தறிவு அதிகம் இல்லாத இடம். மாநிலத்தில் முதன்முதலாக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்குடியினர் கிராம பஞ்சாயத்து. இங்கிருந்து யாருக்காவது நூல்களை வாடகைக்கு எடுக்க வேண்டுமானால் அடர்ந்த காட்டினூடே பயணிக்க வேண்டும். அவர்கள் உண்மையிலேயே வருவார்களா?

பி.வி.சின்னதம்பி, வயது 73. டீ விற்பவர், விளையாட்டு கிளப்பை நடத்துபவர், நூலக ஆசிரியர். அவர் கூறுகிறார்: "ஆம். நிச்சயம் வருவார்கள்". அவரின் சின்னஞ்சிறு கடையில் டீ, மிக்ஸர், பிஸ்கெட், தீப்பெட்டிகள் மற்றும் இதர மளிகைப் பொருட்கள் விற்கப்படுகிறது. அந்தக் கடை எடமால்குடியின் மலைச்சாலையின் அருகில் உள்ளது. இதுதான், கேரளாவின் மிகவும் பின்தங்கிய பஞ்சாயத்து. இவ்விடத்தில் முத்துவான் என்ற ஆதிவாசி இனத்தார் வசிக்கின்றனர். இவ்விடத்துக்கு வருவதெனில் மூணார் பெட்டிமுடியில் இருந்து பதினெட்டு கி.மீ. தூரம் நடக்கவேண்டும். நாங்கள் அவர் வீட்டை தட்டுத்தடுமாறி அடைந்தபோது, அவர் மனைவி வெளியே வேலைக்குச் சென்றுவிட்டார். அவர்களும் முத்தவான் இனந்தான்.

வியப்படைந்து போய் நான் கேட்டேன்: "நான் இப்போது டீ சாப்பிட்டேன். மளிகைச் சாமான்கள் எல்லாம் பார்க்கிறேன். ஆனால், நூலகம் எங்கே உள்ளது?" என்று. உடனே, அவர் தமது முத்திரைச் சிரிப்பை வெளிக்காட்டியபடி, அந்தச் சிறிய கட்டுமானத்தின் உள்ளே அழைத்துச் சென்றார். இருண்ட மூலையில் இரண்டு சாக்குப் பைகளை எடுக்கிறார். ஒவ்வொன்றும் இருபத்தைந்து கிலோ அரிசி பிடிக்கும் சாக்குப்பைகள். இந்தப் பைகளில்தான் அவருடைய சொத்தான புத்தகங்கள் உள்ளன. ஒவ்வொருநாளும் நூலக நேரத்தில், நூல்களை எப்படிப் பிரித்து வைப்பாரோ அப்படியே தரைப்பாயில் கவனத்துடன் பிரித்துவைக்கிறார்.

எங்கள் குழுவில் இருந்த எட்டுப் பேர்களும் நூல்களை ஆச்சரியத்துடன் பார்வையிடுகின்றனர். ஒவ்வொரு புத்தகமும் இலக்கியமாக கிளாஸிக்காக அரசியல் சார்ந்து இருந்தன. மர்மக் கதைகளோ அல்லது மலிவு நூல்களோ இல்லை. அதில் சிலப்பதிகாரத்தின் மலையாள மொழிபெயர்ப்பும் இருந்தது. மற்றும் வைக்கம் முகம்மது பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர், கமலாதாஸ் போன்றோர்களின் புத்தகங்களும் இருந்தன. மகாத்மா காந்தியின் புத்தகத்தோடு, பிரபலமான தோப்பில் பாஷீஸ் உடைய நூலான `நீங்கள் என்னை ஒரு கம்யூனிஸ்ட் ஆக்கிவிட்டீர்கள் 'என்ற நூலும் இருந்தது.

வெளியில் வந்து அமர்ந்தபடி நாங்கள், "இதுபோன்ற புத்தகங்களை எல்லாம் இங்கிருப்போர் படிக்கிறார்களா?’’ என்று கேட்டோம். மற்ற ஆதிவாசிகளைப் போல முத்தவான்களும் இந்தியாவில் குறைந்தளவு கல்வித்திறனைக் கொண்டவர்கள். சின்னத்தம்பி பதில்சொல்லும்விதமாக நூலக பதிவுப் புத்தகத்தை புரட்டுகிறார். இது, இங்கிருந்து நூல்களை எடுத்துச்செல்வதும் பின் திருப்பித் தருவதற்குமான பதிவுப் புத்தகமாகும். இப்பகுதியில், மொத்தம் இருபத்தைந்து குடும்பங்கள் இருக்கலாம். ஆனால், 2013ல் 37 புத்தகங்கள் எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றன. அது, 160 புத்தகங்களில் ஏறத்தாழ நாலில் ஒரு பங்கு. இந்த நூலகத்தில் சேர ரூ.25 கட்டணம். பிற்பாடு மாதத்துக்கு 2 ரூபாய். அதாவது, புத்தகங்கள் எடுக்கும்போதும்கூட வேறெந்தக் கட்டணங்களும் கிடையாது. கறுப்பாக, சர்க்கரையற்ற டீயும் இலவசம். மக்கள் களைப்பாக இங்கே வருவார்கள். மற்றபடி பிஸ்கெட், மிக்ஸர் மற்றும் இதரப் பொருட்களை காசு கொடுத்து வாங்க வேண்டும். சிலநேரங்களில் வருபவருக்கு ஒரு சாப்பாடுகூட இலவசமாகக் கிடைக்கும்.

வாசிப்பில் ஆர்வம் கொண்ட உள்ளூர் மக்களுக்காக நூலகம் நடத்தி வருகிறார் சின்னத்தம்பி

நூல்களை கடன் வழங்கும், திரும்பப்பெறும் தேதிகள் மற்றும் அவற்றை எடுத்துச் செல்வோரின் பெயர்கள் எல்லாம் படு கோர்வையாக அதில் எழுதப்படுகின்றன. இளங்கோவின் சிலப்பதிகாரம் ஒன்றுக்கு மேற்பட்ட தடைகள் எடுத்துச் செல்லப்பட்டன. முன்னமே, இந்த வருடம் பல புத்தகங்கள் எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றன. இந்த அடர்ந்த காட்டில் ஆதிவாசிகள் குழுக்கள் இலக்கியத்தில் வாழ்கின்றன. நான், என் வாழ்விடத்தில் படிக்கிற பழக்கத்தை எண்ணி மனம் புழுங்கினேன்.

எங்கள் குழுவிலிருந்த சிலருக்கு வாழ்க்கையே எழுதுவதுதான். அவர்களின் ‘தான்’ என்ற கர்வம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்தது. எஸ்.விஷ்ணு என்பவர் இளைஞர். கேரளா நிருபர் சங்கத்தைச் சேர்ந்த எங்களுடன் வந்திருந்த மூன்று நிருபர்களில் ஒருவர். அவர், அந்த நூல்களில் வித்தியாசமான ஒன்றைக் கண்டுபிடித்தார். அது, கோடு போட்ட எழுதும் நோட்புக். அதில் தலைப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆனால், அது சின்னத்தம்பியின் வாழ்க்கை வரலாறு. அதை, தான் இன்னும் முடிக்கவில்லை என வருத்தம் கலந்து சொன்னார். இருப்பினும் அதை எழுதிக்கொண்டிருக்கிறார். "சின்னத்தம்பி அதிலிருந்து சிலவற்றை படித்துக் காட்டுங்களேன்" அது இன்னும் பூர்த்தியாகமலிருக்கிறது. ஆனால், படுநேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது. அது, அவரின் முதல் சமூக மற்றும் அரசியல் விழிப்புணர்வைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. ஆசிரியர், ஒன்பது வயதாக இருக்கும்போது மகாத்மா காந்தி கொலை செய்யப்படுகிறார். அந்த நிகழ்வு ஆழமான விளைவை உண்டுபண்ணுகிறது.

சின்னத்தம்பி, தான் எடமால்குடிக்கு திரும்பிவந்து நூலகத்தைத் திறக்க முர்ளி `மாஸ்' [ஆசிரியர்களின் மேதை] தான் காரணம் என்று கூறுகிறார். இந்தப் பகுதிகளில் முர்ளி மாஸ் ஒரு மாபெரும் மேதை தவிர ஆசிரியர். அவரும் ஆதிவாசி இனத்தைச் சார்ந்தவரே. ஆனால், வேறொரு இனம். இந்தப் பஞ்சாயத்தின் வெளிப்புறத்தில் மாங்குளத்தில் வசிக்கும் இனம். முத்தவான்களின் வாழ்க்கைக்கு தன் வாழ்வையே அர்ப்பணித்தவர். "இதுபோன்ற வாழ்வுக்கு என்னை அழைத்துவந்தவர் அவர்" என்றுகூறி, தன்னடக்கமாக சின்னத்தம்பி கூறுகிறார்.

எடமால்குடி 28 குடியிருப்புகளில் ஒன்று மொத்தம் 2500 மக்கள் வசிக்கின்றனர். உலகத்தில் முத்தவான்களின் மக்கள் தொகை அவ்வளவே. இருப்புக்காலகுடியில் ஒரு நூறு பேர்கள் வசிக்கின்றனர். எடமால்குடி ஒட்டுமொத்தமாக காட்டில் நூறு சதுரகிலோ மீட்டர் தூரம்வரை பரவியிருக்கிறது. அதுவொரு பஞ்சாயத்தும்கூட. மொத்தம் 1500 ஓட்டுகள் அதாவது, கேரளாவிலேயே குறைந்த எண்ணிக்கையிலான ஓட்டுகள் கொண்ட பகுதி இதுதான். நாங்கள் வீடு திரும்பும்வழி ஆளரவமற்றதாகும். காட்டு யானைகள், தமிழ்நாட்டிலிருக்கும் பொள்ளாச்சி பகுதிக்குச் செல்ல குறுக்குவழியாக இந்த தடத்தைத்தான் தேர்ந்தெடுக்கும்.

இருப்பினும், இதோ சின்னத்தம்பி உலகிலேயே தன்னந்தனிமையில் ஒரு நூலகத்தை நடத்திக்கொண்டு வருவதோடு, மக்களுக்கு இலவச டீயும் இதர பொருட்களையும் தந்து வருகிறார். எங்களது கண்கள் திரும்பிப்போக இருக்கும்போது நெடியவழியில் உள்ளது. மனமோ சின்னத்தம்பியிடமும் அவரது நூலகத்திலும் உள்ளது

P. Sainath

ପି. ସାଇନାଥ, ପିପୁଲ୍ସ ଆର୍କାଇଭ୍ ଅଫ୍ ରୁରାଲ ଇଣ୍ଡିଆର ପ୍ରତିଷ୍ଠାତା ସମ୍ପାଦକ । ସେ ବହୁ ଦଶନ୍ଧି ଧରି ଗ୍ରାମୀଣ ରିପୋର୍ଟର ଭାବେ କାର୍ଯ୍ୟ କରିଛନ୍ତି ଏବଂ ସେ ‘ଏଭ୍ରିବଡି ଲଭସ୍ ଏ ଗୁଡ୍ ଡ୍ରଟ୍’ ଏବଂ ‘ଦ ଲାଷ୍ଟ ହିରୋଜ୍: ଫୁଟ୍ ସୋଲଜର୍ସ ଅଫ୍ ଇଣ୍ଡିଆନ୍ ଫ୍ରିଡମ୍’ ପୁସ୍ତକର ଲେଖକ।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ ପି.ସାଇନାଥ