உம்பன் புயல் கொண்டுவந்த சூறைக் காற்றும், பலத்த மழையும் மே 20ஆம் தேதி தன்னை சுற்றி ஏற்படுத்திய சேதங்களைக் கண்டு சபிதா சர்தார் அஞ்சவில்லை. “நாங்கள் மோசமான வானிலைக்கு பழகிவிட்டோம். எனக்கு பயமில்லை. கான்கிரீட் வீடுகளில் வசிப்பவர்கள் தான் அச்சப்பட வேண்டும்,“ என்கிறார் அவர்.
தெற்கு கொல்கத்தாவின் புகழ்மிக்க சந்தை பகுதியான கரியாஹாத் தெருக்களில் தான் கடந்த 40 ஆண்டுகளாக சபிதா வசித்து வருகிறார்.
மேற்குவங்கத்தின் தலைநகரில் அதிவேக சூறாவளி கரையைக் கடந்த நாளில் சபிதாவும் அவரைப் போன்ற வீடற்ற பெண்களும் கரியாஹத் மேம்பாலத்தின் அடியில், அவர்களின் மூன்று சக்கர வண்டியில் ஒன்றாக படுத்திருந்தனர். அப்படித் தான் அவர்களின் அன்றைய இரவு கழிந்தது. “நாங்கள் அங்கு படுத்திருந்தபோது உடைந்த கண்ணாடித் துண்டுகள் பறந்து வந்தன. மரங்கள் சாய்ந்தன. சாரல் காரணமாக நாங்கள் நனைந்துவிட்டோம். டாம்... டூம்... என பயங்கரமான சத்தங்களும் கேட்டன,” என்று நினைவுகூர்கிறார் சபிதா.
மேம்பாலத்திற்கு அடியிலுள்ள இடத்திற்கு அவர் முதல் நாள் தான் திரும்பியிருந்தார். “உம்பன் சூறாவளிக்கு முதல் நாள் தான் எனது மகன் வீட்டிலிருந்து வந்தேன். எனது பாத்திரங்கள், துணிகள் எங்கும் சிதறி கிடந்தன. யாரோ தூக்கி எறிந்தது போல கிடந்தது,” என்கிறார் 47 வயதாகும் சபிதா. டோல்லிகஞ்சில் உள்ள ஜல்தார் மாத் குடிசை பகுதியில் வாடகை அறையில் அவரது மகன் ராஜூ வசித்து வருகிறார். 27 வயதாகும் ராஜூ, அவருடைய 25 வயதாகும் மனைவி ரூபா, அவர்களின் குழந்தைகள், ரூபாவின் இளம் சகோதரி ஆகியோர் அங்கு வசிக்கின்றனர்.
மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு தொடங்கியது முதல், கரியாஹத் சாலையோரம் குடியிருப்போரை கொல்கத்தா காவல்துறையினர் வெளியேற்றியதால் அவர் ஜல்தார் மாத் சென்றார். அன்றிரவு மேம்பாலத்தின் கீழ் வசிக்கும் சபிதா உள்ளிட்டோரை காவல் அதிகாரிகள் அணுகினர். “கரோனா வைரஸ் காரணமாக சாலையோரம் வசிக்க கூடாது, வேறு வசிப்பிடத்திற்கு இப்போது செல்லுமாறு அவர்கள் எங்களிடம் சொன்னார்கள்,” என்றார். கொல்கத்தா மாநகராட்சி வார்டு எண் 85ல் உள்ள சமுதாயக் கூடத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.






