”கொஞ்சம் காய்கறிகளை விற்றுக்கொண்டு இருக்கிறேன்; ஆனால் அதில் இலாபமே இல்லை. வீட்டில் எல்லாரும் பெரும்பாலும் சும்மாதான் உட்கார்ந்துகொண்டு இருக்கிறோம். உள்ளூரில் சிமெண்ட் ஆலைகள் இயங்குகின்றன; ஆனால் அங்கு நாங்கள் போவதில்லை” என்கிறார், மோரியிலிருந்து என்னிடம் தொலைபேசியில் பேசிய கரிம் ஜாட். கச் மாவட்டத்தின் லாக்பத் வட்டத்தைச் சேர்ந்தது, அவரின் இந்த ஊர். பக்கிரானி ஜாட் சமூகத்தைச் சேர்ந்த கரிம் ஜாட், ஒரு மால்தாரி. கச்சி மொழியில் மால் என்றால் விலங்குகளைக் குறிக்கும்; தாரி என்றால் காப்பாளர், வைத்திருப்பவர் என்று பொருள். கச் பகுதி முழுவதும் மால்தாரிகள் பசுமாடு, எருமை, ஒட்டகம், குதிரைகள், வெள்ளாடு, செம்மறியாடுகளை மேய்த்துவருகிறார்கள்.
காய்கறிகளை அருகிலுள்ள ஊர்களிலும் சந்தைகளிலும் மொத்தமாக வாங்குவதாக கரிம் சொல்கிறார். ஆனால், விற்பனை செய்யும் போது அவற்றுக்கு உகந்த விலை கிடைப்பதில்லை என அதிருப்தி தெரிவிக்கிறார். சிமெண்ட் ஆலையானது இங்கிருந்து சில கி.மீ. தொலைவிலேதான் நகரியப் பகுதியில் இருக்கிறது. ஆனால் கரிமும் அவருடைய பக்கிரானி ஜாட்டுகளும் வெளியில் செல்லமுடியாதபடி பொதுமுடக்கம் கட்டிப்போட்டுவிட்டது. ஏற்கெனவே அந்த ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் இருக்கின்றனர்; அவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்குவங்கமோ மற்ற மாநிலங்களையோ சேர்ந்தவர்கள். அவர்களில் கணிசமானவர்களும் சொந்த ஊருக்குத் திரும்பமுடியாமல் இங்கேயே இருக்கிறார்கள். குடியேறியவர்களுக்கும் உள்ளூர் ஆள்களுக்கும் இடையே எப்போதும் இணைக்கமான உறவு இருப்பதில்லை.
முடக்கத்தின்போது பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் சவ்லா பிர் திருத்தலத்தைப் பார்க்கமுடியாமல் போய்விட்டது; அங்கு ஒரு பொருள்காட்சியும் நடந்தது என சொல்கிறார், கரிம். ” புனித மாதமான இரமலான் முன்னமே தொடங்கிவிட்டது. ஈகைத் திருநாளுக்கு இன்னும் ஒரு மாதம்கூட இல்லை. இந்த ஈகைத் திருநாள் மாறுபட்டதாக இருக்கப்போகிறது.” என்று கவலையுடன் கூறுகிறார்.
கச்சில் முதல் கோரொனா தொற்று லக்பத் தாலுகாவைச் சேர்ந்த வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஒரு பெண்ணுக்கு வந்தது. மார்ச்சில் புஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அங்கு தொற்று உறுதியானது. லக்பத் ஒட்டக மேய்ப்பர்கள் பெரும்பாலானவர்களுக்கு சொந்த நகரம்.
மார்ச் 24 அன்று பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டவுடனேயே கச் பகுதியில் அனைத்து செயல்பாடுகளும் அப்படியே நின்றுபோய்விட்டன. அதிலிருந்து ஒட்டகம் மேய்ப்பவர்கள் சிரமத்தை அனுபவித்துவருகிறார்கள். காரணம், ஒட்டகங்களின் மேய்ச்சலுக்காக சொந்த ஊர்களிலிருந்து அவர்கள் வெகுதொலைவுக்கு வந்திருக்கிறார்கள். அத்துடன், அவர்கள் இப்போது இருக்கும் பகுதிகள், பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் அல்லது எல்லையில் உள்ளன. அதிஉயர் பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்டிருக்கும் அதிதீவிர பதற்றப் பகுதிகளாகும். திடீர்ப் பொதுமுடக்கத்தால் இந்த மால்தாரிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச்செல்லவும் முடியவில்லை; குடும்பத்துடன் இப்போது இருக்கும் இடங்களில் உணவுக்கு போதுமான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளவும் அவர்களால் இயலாமல்போனது.
இப்போதைக்கு அவர்களின் கால்நடைகளுக்கு ஒரு குறையும் இல்லை. அவற்றுக்கு மேய்வதற்கு புல்வெளி இருக்கிறது. இந்த முடக்கமானது மேலும் நீட்டிக்கப்பட்டால் மொத்த மந்தைக்கும் தீவனம்தருவது சிக்கலாகக் கூடும். அத்தோடு, இந்த ஆண்டு கோடைகாலம் முன்னமே வந்துவிட்டதைப் போல வெயில் வாட்டுகிறது.
நக்கத்ரானா வட்டாரத்தில், புல்வெளிகளில் அமைந்திருந்த சில மந்தைகளுக்கு வந்த போலீசு, அங்கிருந்து மேற்கொண்டு நகரக்கூடாது என அறிவுறுத்திவிட்டுப் போயிருக்கிறது. ஆக, இந்த நாடோடி இடையர்கள், உணவுக்காகவோ வேறு வேலைக்கோ எங்காவது போகவேண்டும் என்றால், அவரவர் ஊர்களுக்குத்தான் போயாகவேண்டும். ஆனால் அதுவும் ரொம்ப கஷ்டம்.










