கடலூர் மீன்பிடித் துறைமுகத்தில் வியாபாரம் செய்யத் தொடங்கியபோது அவருக்கு வயது 17. அவரிடம் இருந்ததெல்லாம் ரூ. 1,800 மட்டும்தான். அவரது தாயார் தொழில் தொடங்க அவருக்குக் கொடுத்தத் தொகை அது. இன்று, 62 வயது வேணி, துறைமுகத்தில் வெற்றிகரமான ஏலதாரராகவும் விற்பனையாளராகவும் உள்ளார். மிகவும் சிரமப்பட்டு கட்டிய வீட்டைப் போலவே, தனது தொழிலையும் "படிப்படியாக" கட்டியெழுப்பியுள்ளார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் விட்டு பிரிந்த பிறகு, நான்கு குழந்தைகளை வேணி தனியாக வளர்த்தார். அவரது தினசரி வருமானம் குறைவாக இருந்தது. வாழ்க்கை ஓட்ட போதுமானதாக இல்லை. சுழல் வலை மீன்பிடித்தல் அறிமுகமானதும், அவர் படகுகளில் முதலீடு செய்தார். பல லட்சங்களில் கடன் வாங்கினார். முதலீட்டில் கிடைத்த வருமானம் அவரது குழந்தைகள் கல்வி பயிலவும், வீடு கட்டவும் உதவியது.
1990களின் பிற்பகுதியில் இருந்து கடலூர் கடற்கரையில் சுழல் வலை மீன்பிடிப்பு பிரபலமடைந்தது. 2004 சுனாமிக்குப் பிறகு அதன் பயன்பாடு வேகமாக அதிகரித்தது. மத்தி, கானாங்கெளுத்தி மற்றும் நெத்திலி போன்ற மீன் கூட்டங்களை வளைத்துப் பிடிக்கும் நுட்பத்தை சுழல் வலைகள் பயன்படுத்துகிறது.


