இன்னொரு டாக்சி ஓட்டுநரிடமிருந்து ஷிவ்புஜன் பாண்டேக்கு தொலைபேசி அழைப்பு வந்ததும் அவசரமாக ஒரு தட்கல் டிக்கெட் எடுத்து ஜுலை 4ம் தேதி மிர்சாப்பூரிலிருந்து உத்தரப்பிரதேசத்துக்கு ரயிலேறினார்.
அடுத்த நாள் மும்பை அடைந்தார். பரபரப்பாக திரும்பிச் சென்றபோதும் 63 வயது ஷிவ்புஜனால் அவருடைய டாக்சியை காப்பாற்ற முடியவில்லை.
மும்பை சர்வதேச விமானநிலையத்தால் அவரின் டாக்சி ஏலமிடப்பட்டு விட்டது. தொற்றுக்காலத்தில் பல மாதங்களாக யாரும் வராமல் நிறுத்தப்பட்டிருந்த காரணத்தால் 42 டாக்சி கேப்களை விமானநிலையம் ஏலம் விட்டிருக்கிறது.
ஷிவ்புஜன் தன் வாழ்வாதாரத்தை இழந்தார். 1987ம் ஆண்டிலிருந்து அவர் டாக்சி ஓட்டிக் கொண்டிருக்கிறார். 2009ம் ஆண்டில் கறுப்பு-மஞ்சள் மாருதி ஆம்னி ஒன்றை வங்கிக் கடனில் வாங்கினார்.
“இதைச் செய்வதால் அவர்களுக்கு என்னக் கிடைத்தது?” என ஒரு மதியவேளையில் சகார் விமான நிலைய நடைபாதையில் நின்றுகொண்டு கோபமாகக் கேட்டார். “என் முழு வாழ்க்கையும் இந்த வேலையைத்தான் செய்திருக்கிறேன். இப்போது அவர்கள் எங்களிடம் இருக்கும் கொஞ்சத்தையும் எடுத்துக் கொண்டார்கள். இந்த நேரத்தில் அவர்கள் எங்களுக்குச் செய்யும் மோசமான காரியம் இது.”
இதே தண்டனை சஞ்சய் மாலிக்கும் நேர்ந்தது. அவரின் வேகன் ஆர் வாகனம் மார்ச் 2020லிருந்து வடக்கு மும்பையிலுள்ள அன்னவாடியின் பெரிய வாகன நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஜுன் 29, 2021 இரவு, அவரின் வாகனம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. ஒரு நண்பர் அத்தகவலை அடுத்த நாள் தெரிவித்தார். “என்ன நடந்தது என எனக்குப் புரியவில்லை,” என்கிறார் 42 வயது சஞ்சய்.














