சில சமயங்களில் எங்காவது ஓடிவிடலாம் என்ற எண்ணம் கூட சிந்தம்பல்லி பரமேஸ்வரிக்கு வந்துவிடுகிறது. “என் குழந்தைகளுக்கு என்னைவிட்டால் யாருமில்லை என்பதால் அவர்களை விட்டுச் செல்ல முடியாது,” என்கிறார் அந்த 30 வயது தாய்.
2010 நவம்பரில் பரமேஸ்வரியின் கணவர் சிந்தம்பல்லி கமல் சந்திரா தற்கொலை செய்து கொண்ட போது அவருக்கு வயது 20 களில் இருக்கும். “அவர் தற்கொலை கடிதம் எதுவும் எழுதவில்லை. அவருக்கு எழுத்தறிவு இல்லாதது கூட காரணமாக இருக்கலாம்,” என்று சிறு புன்முறுவலுடன் அவர் சொல்கிறார்.
இக்காரணத்தால் அவர் இரண்டு பிள்ளைகளையும் தனியாக வளர்த்து வருகிறார். 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விடுதியில் தங்கி சேஷாத்ரியும், அன்னப்பூர்ணாவும் அரசுப் பள்ளிக்கு சென்று வருகின்றனர். “அவர்கள் நினைவு வந்துகொண்டே இருக்கும்,” என்று தன்னைத் தானே ஆற்றுப்படுத்தியபடி சொல்லும் அவர், “அவர்களுக்கு நேரத்திற்கு உணவு கிடைக்குமா எனத் தெரியவில்லை,” என்கிறார்.
மாதத்திற்கு ஒருமுறை சென்று அவர்களை பார்க்க வேண்டும் என அவர் விரும்புகிறார். “என்னிடம் பணமிருந்தால், அவர்களுக்கு[பிள்ளைகளுக்கு] 500 [ரூபாய்] தருவேன், குறைவாக இருந்தால் 200 [ரூபாய்] தருவேன்,” என்கிறார் அவர்.
தெலங்கானாவில் பட்டியலினமான மதிகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். சில்தம்பல்லி கிராமத்தில் ஒற்றை அறை வீட்டில் பரமேஸ்வரி வசிக்கிறார். வீட்டின் கூரை தொய்வடைந்துள்ளது. வெளியே ஒரு திறந்த கொட்டகையும் உள்ளது. தெலங்கானாவின் விகராபாத் மாவட்டத்தில் உள்ள அந்த வீடு அவரது மறைந்த கணவர் கமல் சந்திரா குடும்பத்திற்கு சொந்தமானது. அவரை திருமணம் முடித்தவுடன் பரமேஸ்வரி அந்த வீட்டிற்கு வந்துவிட்டார்.










