கடந்த மூன்றாண்டுகளில் எத்தனை மருத்துவமனைகளுக்குச் சென்றிருப்பீர்கள்?
இக்கேள்வியை கேட்டதும் சுஷிலா தேவி மற்றும் அவரது கணவர் மனோஜ் குமாரின் முகங்களில் சோர்வும், விரக்தியும் நிழலாடின. மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அவர்கள் இருவரும் (அவர்களின் பெயர்கள் இங்கு மாற்றப்பட்டுள்ளன) மறந்துவிட்டனர். 2017ஆம் ஆண்டு பண்டிகு நகரில் உள்ள மாதுர் மருத்துவமனையில் கருத்தடை செய்த பிறகு தான் பிரச்சனை தொடங்கியது.
10ஆண்டுகால திருமண வாழ்வில் மூன்று பெண் குழந்தைகளைத் தொடர்ந்து நான்காவதாக மகன் பிறந்துள்ளான். எனவே குடும்ப வாழ்வை மேலும் சமாளிப்பதற்காக 27 வயதான சுஷிலாவிற்கு கருத்தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. ராஜஸ்தானின் தெளசா தாலுக்காவில் உள்ள தங்களின் தானி ஜாமா கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் பண்டுகியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. எனினும் அவர்களின் கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள குண்டல் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இருந்தது.
“[அரசு] சுகாதார மையங்களில் கருத்தடை முகாம்கள் குளிர் காலங்களில் தான் அதிகம் நடைபெறும். குளிர் காலங்களில் வேகமாக நலமடையலாம் என்பதால் பெண்கள் அம்மாதங்களை தேர்வு செய்கின்றனர். கோடைக் காலங்களில் அறுவை சிகிச்சை செய்ய விரும்பினால் தெளசா, பண்டுகியில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அவர்களை அழைத்துச் செல்வோம்,” என்கிறார் 31 வயதாகும் ஆஷா பணியாளரான சுனீதா தேவி. 25 படுக்கைகள் கொண்ட மாதுர் பொது மருத்துவமனைக்கு அத்தம்பதியை அவர் அழைத்துச் சென்றார். மாநில குடும்ப நல திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதால் கருத்தடைக்கு சுஷிலா கட்டணம் செலுத்தவில்லை. அவருக்கு உதவித்தொகையாக ரூ.1,400 வழங்கப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களில் சுஷிலாவிற்கு மாதவிடாய் வந்துள்ளது. அதிலிருந்து அடுத்த மூன்றாண்டுகளுக்கு வேதனை தரும் வலியும், சோர்வும் தொடங்கின.
“முதன்முதலில் அவளுக்கு வலி வந்தபோது வீட்டிலிருந்த வலி நிவாரணியை கொடுத்தேன். அது கொஞ்சம் உதவியது. மாதவிடாய் வரும்போதெல்லாம் அவள் வலியால் துடிப்பாள்,” என்கிறார் 29 வயதாகும் மனோஜ்.
“வலி தீவிரமடைந்து அதிகளவு உதிரப்போக்கு ஏற்படும். குமட்டல் வரும். நான் எப்போதுமே உடல் பலவீனமானவள்,” என்கிறார் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ள இல்லத்தரசியான சுஷிலா.
மூன்று மாதங்களாக பிரச்னை தொடர்ந்ததால், இத்தம்பதியினர் தயக்கத்துடன் குண்டலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.







