அம்ரோஹாவிலிருந்து டெல்லி செல்லும் காசி விஸ்வநாத் விரைவு ரயிலில் அதிகாலை வேளையில் அமர்ந்திருந்த அய்னுல் ஷேக்கின் மனதிற்குள் பலவிதமான அச்சங்கள் எழுந்தன. “எனக்கு பயமாக இருந்தது. நான் பம்பாய் செல்கிறேன். மிக தொலைவிற்கு செல்கிறேன். அவர்கள் என்னிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? நான் எப்படி சமாளிப்பேன்?” இந்த பதற்றமே பெண்களுக்கான பொது ரயில் பெட்டியில் பயணித்த அந்த 17 வயது சிறுமியின் இரவு உறக்கத்தை பறித்தது.
அவரது மாமனார் ஆலிமும் அதே ரயிலில்தான் பயணித்தார். டெல்லியிலிருந்து மற்றொரு ரயில் பிடித்து பாந்த்ரா முனையத்திற்கு அவர்கள் வந்தனர். மக்தூம் அலி மஹிமி தர்காவிற்கு வெளியே பிச்சை எடுக்கும் தனது தொழிலை தொடங்குவதற்கு முன், மாஹிமில் உள்ள நயி பஸ்தி குடிசைப் பகுதியில் இருந்த புதிய வீட்டிற்கு அய்னுலை அவர் அழைத்துச் சென்றார்.
அய்னுல் ஷேக்கும் அடுத்த மூன்றாண்டுகளுக்கு இத்தொழிலை செய்தார். மத்திய மும்பை கஸ்தூர்பா மருத்துவமனையில் பல வாரங்களாக இருக்கும் தனது 18 மாத மகனின் மருத்துவ செலவுக்கு இத்தொகை உதவியது. மகனுக்கு என்ன தொந்தரவு என்பதை அய்னுல் அறியவில்லை. “என்னால் யாரிடமும் [மருத்துவ செலவிற்கு] பணம் வாங்க முடியாது, வாங்கினால் யார் திருப்பி செலுத்துவது?” என கேட்கிறார் அவர்.
மும்பையில் ரயில் ஏறியபோது அவருக்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை.
விரைவு ரயிலில் பயணித்த அன்று அய்னுலிடம் கொஞ்சம் துணிகள் கொண்ட ஒற்றை பை மட்டுமே இருந்தது. தனது புகுந்த வீட்டிற்காக சிறிது சிறிதாக சேர்த்து வாங்கிய பாத்திரங்கள் அனைத்தும் விற்கப்பட்டன. அவர் சிறுமியாக இருந்தபோதே பிற வீடுகளில் பாத்திரம் துலக்கி, துணிகளை துவைத்து, வயல்களில் வேலை செய்துள்ளார். “ எனக்கு கொஞ்சம் பணம் அல்லது உணவு கொடுப்பார்கள். பணத்தை பெட்டியில் போட்டு வைத்து திருமணத்திற்காக சேமித்தேன். 5,000 ரூபாய் வரை சேமித்து அருகமை கடைக்கு சென்று பித்தளை கிண்ணங்கள், தட்டுகள், கரண்டிகள், செம்பு குவளைகள் போன்றவற்றை வாங்கினேன். ”






