அஷ்வினியும், ராஜ்குமாரியும் ( அவர்களின் மகன் பிரதிப்புடன், முகப்பு படத்தில் மேலே இருப்பவர்கள்) ஏழாண்டுகளுக்கு முன்னர் பிழைப்புத் தேடி இங்கு வந்தவர்கள். விவசாய கூலி வேலை, கட்டிட வேலை, தையல் வேலை, துணிக்கடை போன்ற வேலைகளை செய்து வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர். பர்பதாவில் மற்ற மூன்று குழந்தைகளையும் அவர்களது பாட்டியிடம் விட்டுவிட்டு வந்துள்ளனர்.
ஜம்முவில் வாழுவது எளிது, இங்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன என்று அவர்களின் கிராமத்தில் யாரோ கூறியுள்ளனர். “எதையும் யோசிக்காமல், கையிலும் அவ்வளவாக இல்லாமல் நாங்கள் பர்பதாவை விட்டு வந்தோம்” என்கிறார் நர்மதாபாய். “சில சேமிப்பு, நம்பிக்கையுடன் எந்த திட்டமிடலும் இல்லாமல், என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் ரயிலில் ஏறி இங்கு வந்தோம்.”
உள்ளூர் ஒப்பந்தக்காரர் மூலம் அவர்களுக்கு கூலி வேலைகள் கிடைத்தன. “இருபது ஆண்டுகளில் ஏராளமானவர்களுடன் (ஒப்பந்தக்காரர்கள்) நாங்கள் வேலை செய்துவிட்டோம்” என்று மோகன்லால் என்னிடம் சொன்னார்.
ஆனால் இந்த ஊரடங்கு அவர்களது பிழைப்பையும், வருமானத்தையும் நிறுத்திவிட்டது. “ஏப்ரல் மாத இறுதியில், எங்களிடம் 2000 ரூபாய்தான் இருந்தது என்றார். “எங்களுக்கு தினமும் கூலி அளிக்கப்படுவதில்லை, சில வாரங்களுக்கு 2000-3000 ரூபாய் வரை கிடைக்கும். மாத இறுதியின்போது மொத்த வருவாயில் இத்தொகையை ஒப்பந்தக்காரர் கழித்துவிட்டு மிச்சத்தை தருகிறார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, ஒப்பந்தக்காரரிடம் 5 சதவீத மாத வட்டியில் ரூ. 5000 மோகன் லால் கடன் வாங்கியுள்ளார். “இது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்கிறார் அவர்.
“எங்களிடம் போதிய சேமிப்பு இல்லை” என்றும் நர்மதாபாய் சொல்கிறார். “எங்களின் இரு மகள்களையும் [இருவரும் பி.எஸ்சி மாணவிகள்] ஊரில் விட்டு வந்துள்ளோம். அவர்களுக்கு மாதந்தோறும் தலா 4,000 அனுப்ப வேண்டும். மிச்ச பணத்தில்தான் மளிகை, சோப், எண்ணெய், பிற செலவுகள் எல்லாம்.”
“மழை மற்றும் குளிர் காலங்களில் வேலை குறைவாக இருக்கும் என்பதால், கூடுதல் பணத்திற்காக சட்டை தைப்போம்” என்கிறார் அஷ்வினி. அவரும், ராஜ்குமாரியும் கையால் இயக்கும் தையல் இயந்திரம் வைத்துள்ளனர். “மற்றவர்களைப் போல நாங்களும் கஷ்டப்படுகிறோம். கடன் அடைக்க வேண்டி உள்ளது.” அவர்களின் இரண்டாவது பிள்ளையான 17வயதாகும் பிரதிப் சந்திராவும் கூலி வேலை செய்கிறார்; கடந்தாண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால் ஜம்முவிற்கு கூலி வேலை செய்ய வந்துள்ளார். அவர் தினமும் ரூ. 400 வரை ஈட்டுகிறார்.
மூன்றாவது குடிசையில் 35 வயதாகும் திலிப் குமாரும், 30 வயதாகும் திஹரின்பாய் யாதவும் வசிக்கின்றனர்; அவர்களும் கட்டிட பணிகள் செய்து தினக்கூலியாக தலா ரூ. 400 சம்பாதிக்கின்றனர். வேலை கொடுக்கும் ஒப்பந்தக்காரர்கள் அடிக்கடி மாறுவது அல்லது தாமதமாக ஊதியம் கொடுப்பது போன்ற காரணங்களால் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள புறநகரான தலாப்-தில்லோவில் அவர்கள் கூலி வேலை தேடுகின்றனர்.
ஜஞ்ஜிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள சம்பா தாலுக்காவின் பஹிரதி கிராமத்திலிருந்து இக்குடும்பம் எட்டு ஆண்டுகளுக்கு முன் ஜம்முவிற்கு புலம்பெயர்ந்தது. “எனது கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்துவந்தேன். நீண்ட காலமாக நிலங்கள் வறண்டு போனதால் விவசாயம் இல்லாமல் இங்கு புலம்பெயரும்படி ஆகிவிட்டது” என்கிறார் திலீப்.
ஜம்முவில் அவர்களின் 15 வயது மகள் பூர்ணிமாவை இந்தாண்டு 10ஆம் வகுப்பு சேர்த்துள்ளனர். (பிலாஸ்புரியிலிருந்து நேர்காணலை மொழிப்பெயர்க்க பூர்ணிமாதான் உதவினார், சிலர் இந்தியிலும் பேசினர்.) அவளின் படிப்பிற்காக அவர்கள் பஹிரதியில் உள்ள வட்டிக் கடைக்காரரிடம் ரூ. 10,000 கடன் வாங்கியுள்ளனர். “அவற்றில் வெறும் 3000 தான் மிஞ்சியது” என்று ஏப்ரல் இறுதியில் என்னிடம் அவர் சொன்னார். “அவளது படிப்பிற்காக வாங்கிய கடன் தொகைதான் எங்களை இப்போது உயிருடன் வைக்க உதவுகிறது.”
இந்த மூன்று குடும்பங்களுக்கும் ஜம்முவில் குடும்ப அட்டை பதிவு செய்யாத காரணத்தால் அவர்களுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரேஷன் கடைகளில் எந்த தானியமும் கொடுப்பதில்லை. “வெளியாட்களுக்கு அவர்கள் கொடுப்பதில்லை எனக் கூறி விரட்டுகின்றனர். எங்களை கேவலமாகவும் பேசுகின்றனர்” என்கிறார் அஷ்வினி. “உணவுப் பெறுதல், அதற்கு வேலை செய்தல் என்றுதான் எங்கள் வாழ்க்கை ஊரடங்கிற்கு பிறகு சுழல்கிறது. இங்கு வந்த கடந்த ஏழு ஆண்டுகளில் இதுபோன்ற மோசமான ஒரு சூழலை நாங்கள் சந்தித்தது கிடையாது. எங்கள் அண்டை வீட்டினரின் கருணையில்தான் ஓரளவு சமாளிக்கிறோம்.”
ஆரம்ப நாட்களில் இங்குள்ள பெரிய கட்டடங்களில், வீடுகளில் வசிப்பவர்கள் உதவினர். கடந்த சில வாரங்களாக மளிகை, காய்கறிகள் போன்றவற்றை குடிசைகளுக்குக் கொடுப்பதை அவர்கள் குறைத்துக் கொண்டனர். மே மாதம்18ஆம் தேதி வாக்கில் அக்குடும்பத்தினரை நான் சந்தித்தபோது, இப்படி உதவி செய்து தங்களுக்கும் சிரமம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
“இப்போது நாங்கள் நன்றாகவே இருக்கிறோம்“ என்கிறார் மோகன் லால். எங்களை சுற்றியுள்ள நான்கு குடியிருப்புகளில் இருந்து 15 கிலோ மாவு, 10 கிலோ அரிசி, 5 கிலோ உருளைக் கிழங்கு கொடுத்து உதவினர். இங்கிருந்து செல்ல வேண்டாம் என்று அவர்கள் சொன்னார்கள். இந்த மளிகைப் பொருட்கள் தீர்ந்தவுடன் மீண்டும் ஒருமுறை கேட்கலாம் என்றனர். எங்களுக்கு ஆளுக்கு ரூ.500 கொடுத்தார்கள். அதை கொண்டு நாங்கள் எண்ணெய், மசாலாக்கள், உப்பு போன்றவற்றை வாங்கி வைத்துள்ளோம்.”
“இவை தான் எங்கள் வாழ்க்கையை ஓட்ட உதவுகிறது. சேத்ஜியின் வேன் இருமுறை வந்து விநியோகம் செய்தது,” என்கிறார் அஷ்வினி. “ஆனால் இவை எல்லாம் தீர்ந்த பிறகு என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை.”