“அவசரம் என்றால் இங்குதான் வருவேன்,” என்று கூறும் தியா டோப்போ (பெயர் மாற்றப்பட்டுள்ளது) முள் நிறைந்த தேயிலை புதர்களின் அடர்ந்த பகுதியில் தென்படும் சிறு இடைவெளியை குறிப்பிடுகிறார். “இன்று காலை தான் என்னை தேனீ கடித்தது. உங்களுக்கு இங்கு பாம்புக் கடி கூட கிடைக்கும்,” என்கிறார் அவர் மனவேதனையுடன்.
தினக்கூலி வேலை செய்பவர்களின் பணிச்சூழல் என்பது மிகவும் கடினமானது. தேயிலை தோட்ட தொழிலாளியாக இருக்கும் பெண்கள் சிறுநீர் கழிப்பதில் கூட எதிர்பாராத பல ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர்.
53 வயது தொழிலாளி ஒருவர் நினைவுகூருகையில், “இளவயதில் அவசரத்திற்கு சைக்கிளில் கழிப்பறைக்கு போகலாம் என சிலசமயம் நினைப்பேன்.” ஆனால் அப்படி சென்று வந்தால் இலை பறிக்கும் நேரம் குறைந்துவிடும். “தினமும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை [இலைகள்] அடைய வேண்டும். இதை [வருவாய் இழப்பை] ஏற்கும் நிலை எனக்கு கிடையாது.”
அவரது சகபணியாளர் சுனிதா கிஸ்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சொல்கிறார், “இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. ஒன்று, நாள் முழுவதும் [சிறுநீர் கழிக்கும் தேவையை] கட்டுப்படுத்துவது அல்லது இங்கு [திறந்தவெளியில்] கழிப்பது. இங்கு பூச்சிகள், அட்டைகள் அதிகம் உள்ளதால் மிகவும் ஆபத்து.”
சில தேயிலை நிறுவனங்கள் குடை, செருப்பு, தார்ப்பாய், பை போன்றவற்றை அளிக்கின்றன. “செடிகளில் உள்ள தண்ணீர் எங்கள் ஆடைகளை நனைக்காமல் தடுக்க தார்ப்பாய் உதவுகிறது. பிற பொருட்களை [பூட்ஸ் போன்ற உபகரணங்கள்] நாமே வாங்கிக் கொள்ள வேண்டும்,” என்கிறார் தியா.
“இடைவேளை இன்றி 10 மணி நேரம் தொடர்ந்து நாங்கள் வேலை செய்ய வேண்டும்,” என்கிறார் 26 வயது சுனிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்றால் தோட்டத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து செல்ல வேண்டும். இதில் சில மணி வேலை நேரங்கள் குறைவதால் அவரது கூலியும் குறையும். இரண்டு குழந்தைகளின் தாய் என்ற முறையில் அவருக்கு இது இழப்பை ஏற்படுத்தும்.









