அன்புள்ள இந்திய தலைமை நீதிபதி அவர்களுக்கு,
“ஊடக வரைப்படத்திலிருந்து புலனாய்வு ஊடகவியல் என்பது துரதிஷ்டவசமாக மறைந்து வருவதாகக் கூறிய தங்களின் முக்கியமான கருத்திற்கு நன்றி.. “நாம் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில், மிகப்பெரும் மோசடிகளை வெளிப்படுத்தும் செய்தித்தாள்களை ஆவலுடன் படித்திருக்கிறோம். செய்தித்தாள்கள் நம்மை ஒருபோதும் ஏமாற்றியதில்லை,” என்று சொல்லி இருக்கிறீர்கள்.
ஊடகத்தைப் பற்றி இதை விட உண்மையான வார்த்தைகளை சமீப காலங்களில் கேட்டிருக்க மாட்டோம். சிறு காலத்திற்காவது உங்களது பணியாக இருந்த துறை எப்படி இருந்தது என்பதை நினைவு கூர்ந்ததற்கு நன்றி.. நீங்கள் ஈநாட்டில் 1979ஆம் ஆண்டு இணைந்த சில மாதங்களில்தான் நானும் ஊடகத்துறைக்கு வந்தேன்.
அண்மையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் நீங்கள் சொன்னது போல – அப்போதெல்லாம் நாம் எழுந்தவுடன், “செய்தித்தாள்களில் வெளிவரும் மிகப்பெரும் ஊழல் செய்திகளை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருந்தோம்.” ஐயா, இன்று நாம் எழுந்தவுடன் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் (UAPA) எனும் கொடூரச் சட்டத்தின் கீழ் ஊழல்களை தோலுரிக்கும் பத்திரிகையாளர்கள் எப்படி குற்றம்சாட்டப்படுகிறார்கள், சிறையில் அடைக்கப்படுகிறார்கள் போன்ற செய்திகளைதான் படிக்கிறோம். அல்லது அண்மையில் நீங்கள் கடுமையாக விமர்சித்த, அந்நிய செலாவணி தடுப்புச் சட்டம் (PMLA) போன்ற சட்டங்கள் எப்படி மிக மோசமான வகையில் தவறான வகையில் பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றி படிக்கிறோம்.
நீங்கள் உங்கள் உரையில் குறிப்பிட்டது போல, “கடந்த காலங்களில் ஊழல்கள், தவறான செயல்பாடுகள் குறித்து செய்தி வெளியிட்டு ஊடகங்கள் ஏற்படுத்திய அதிர்வுகளுக்கு அதனால் ஏற்பட்ட கடுமையான பின்விளைவுகளுக்கு நாம் சாட்சியாக இருந்தோம்”. ஆனால் இன்று கடும் பின்விளைவுகளை இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடும் பத்திரிகையாளர்கள் சந்திக்கின்றனர். நேரடி செய்திகளை மட்டுமே அளிப்பவர்களுக்கும் இதே கதிதான். உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராசில் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்கச் சென்ற வழியிலேயே சித்திக் கப்பான் கைது செய்யப்பட்டார். ஓராண்டிற்கு மேலாகியும் அவர் பிணை கிடைக்காமல் சிறையில் தவித்து வருகிறார். வழக்கு விசாரணை ஒவ்வொரு நீதிமன்றத்திலும் பந்தாடப்படுவதால் அவரது உடல்நிலையும் மோசமடைந்துவிட்டது.
நம்முன் உள்ள இதுபோன்ற உதாரணங்கள் இருக்கும் போது ஊடகவியல் - புலனாய்வு மற்றும் பிற வகையிலான ஊடகவியல் – விரைவிலேயே மறைந்துவிடும்.
நீதிபதி ரமணா அவர்களே, நீங்கள் சரியாக சொன்னீர்கள், கடந்த காலங்களில் ஊழல், மோசடி வெளிப்பட்டது போல “அண்மைக் காலங்களில் எந்த செய்தியும் வெளிவந்ததாக நினைவில்லை. எல்லாம் நன்றாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் இப்போது இருக்கிறது. எல்லாவற்றையும் உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன். ”
சட்டம், ஊடகம் என இரு துறைகளிலும் ஆழ்ந்த அறிவுள்ள நீங்கள், இந்திய சமூகத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறீர்கள் என்கிற அடிப்படையில் நீங்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாக சென்று, புலனாய்வு ஊடகவியல் மட்டுமல்ல, பொதுவாகவே இந்திய ஊடகவியலை அழுத்தி வைத்திருக்கும் காரணிகளை முன் வைத்திருக்கலாம். எங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் என்று நீங்கள் சொல்லியிருப்பதால் மூன்று வகை காரணிகளை உங்கள் முன் வைக்கலாமா?
முதலாவது, ஊடக உடைமையின் கட்டமைப்பு பெரும் லாபத்தை ஈட்டும் சில கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் குவிந்துள்ளன.
இரண்டாவது, சுதந்திர ஊடகத்தின் மீது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நிகழும் அரசின் தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகள்.
மூன்றாவது, அறம் சார்ந்த இதழியலின் சிதைவு மற்றும் அதிகார வர்க்கத்திற்கு ஸ்டெனொகிராப்பராக வேலைபார்க்கவும் தயாராக இருக்கும் சில மூத்த ஊடகவியலாளர்கள்.
பத்திரிக்கைத் துறையை கலையாக கற்பிக்கும் ஆசானாக, பத்திரிகை அல்லது ஸ்டெனோகிராஃபி என நம் துறையில் இரண்டு வகையான பள்ளிகள் உள்ளன – அவற்றில் எதை தேர்வு செய்வீர்கள் என நான் எனது மாணவர்களிடம் கேட்கிறேன்.
கடந்த 30 ஆண்டுகளாகவே இந்திய ஊடகம் என்பது அரசியல் ரீதியாக சுதந்திரமாக இருந்தாலும், லாப நோக்கில் செயல்படுகின்றன என்ற வாதத்தை நான் முன்வைத்து வருகிறேன். இன்றும் அவை லாப நோக்கில் செயல்படுகின்றன. நம்மிடையே உள்ள சில சுதந்திர குரல்களும் அரசியல் ரீதியாக சிறை வைக்கப்படுகின்றன.
ஊடக சுதந்திரத்தின் மோசமான நிலை குறித்து ஊடகங்களுக்குள்ளேயே மிகக் குறைவாவே விவாதம் எழுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். நான்கு முன்னணி அறிவுஜீவிகள் – அனைவரும் பத்திரிகை துறையுடன் தொடர்புள்ளவர்கள் – கடந்த சில ஆண்டுகளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பழம்பெரும் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் முழு நேர பத்திரிகையாளர். ரைசிங் காஷ்மீரின் ஆசிரியர் சுஜாத் புகாரி துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானார். மற்ற மூவரும் முறையான எழுத்தாளர்கள், ஊடகங்களில் கட்டுரை எழுதுபவர்கள். நரேந்திரா தபோல்கர் சுமார் 25 ஆண்டுகளாக மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பத்திரிகை ஒன்றை நிறுவி நடத்தி வந்தவர். கோவிந்த் பன்சாரி, எம்.எம். கல்புர்கி ஆக்கப்பூர்வமான எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள்.
அனைவருக்குமான ஒற்றுமை ஒன்றுதான்: அவர்கள் பகுத்தறிவுவாதிகள், இந்திய மொழிகளில் எழுதும் பத்திரிகையாளர்கள். அவர்களது கொலையாளிகளுக்கு இதுவே அச்சுறுத்தலாக மாறியது. நான்கு பேரையும் படுகொலை செய்தவர்கள் எந்த அமைப்பையும் சாராதவர்கள் என்றாலும், அரசின் சலுகைகளை அனுபவிக்கின்றனர். இதுபோன்ற அமைப்பற்றவர்களின் தாக்குதல் பட்டியலில் மேலும் பல சுதந்திர ஊடகவியலாளர்கள் உள்ளனர்.
ஊடகவியலின் இந்த மோசமான நிலையை கொஞ்சமாவது சரி செய்ய வேண்டுமென்றால், ஊடக சுதந்திரம் சுதந்திர இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் மிக மோசமாக இருக்கிறது என்கிற உண்மையை நீதித்துறை எதிர்கொள்ள வேண்டும். பெகாசஸ் வழக்கில் நீங்கள் சந்தேகமில்லாமல் கவனித்திருக்க கூடும், நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட அரசு எப்படிப்பட்ட அடக்குமுறையை ஏவக்கூடும் என்பதை. அவசரகால கொடுமைகள் பரவாயில்லை என்கிற அளவுக்கு அது இருக்கிறது.
2020ஆம் ஆண்டு ஃபிரான்சைச் சேர்ந்த ரிப்போர்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் வெளியிட்ட உலக ஊடக சுதந்திர தரவரிசையில் இந்தியா 142ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திரத்தின் மீதான இந்த அரசின் அணுகுமுறை குறித்த என்னுடைய நேரடி அனுபவத்தைப் பகிர்கிறேன். அவமானகரமான 142ஆவது இடத்தால் கோபமடைந்த ஒன்றிய அமைச்சரவைச் செயலர், இந்தியாவில் ஊடக சுதந்திரத்தின் நிலையை சரி செய்ய ஒரு குறியீட்டு கண்காணிப்புக் குழுவை அமைக்கும் எண்ணம் அவரிடம் இருந்தது. உறுப்பினராக இருக்கும்படி என்னை கேட்டபோது, WPFI தரவரிசையை மறுதலிப்பதை விட, இந்தியாவில் ஊடக சுதந்திரத்தின் உண்மையான நிலை குறித்து நாங்கள் அதிக கவனம் செலுத்துவோம் என்ற உத்தரவாதத்தின் பேரில் நான் ஏற்றுக்கொண்டேன்.
13 பேர் கொண்ட குழுவில் அரசு அதிகாரிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவன ஆராய்ச்சியாளர்கள் 11 பேர் இருந்தனர். ஊடக சுதந்திரம் குறித்து கையாளும் குழுவில் இரண்டே இரண்டு ஊடகவியலாளர்கள்! அதில் ஒருவர் இருமுறை நடந்த கூட்டத்திலும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. கூட்டங்கள் அமைதியாகவே நடந்தன. நான் மட்டுமே கேள்விகள் எழுப்பும் நபராக இருந்தேன். பணியாளர் குழுவினால் வரையப்பட்ட வரைவு அறிக்கையில் வரைவு என்ற சொல் இல்லை. கூட்டத்தில் எழுப்பப்பட்ட எந்த தீவிர விஷயமும் அறிக்கையில் வெளிப்படவில்லை. எனவே நான் தனியாக சமர்ப்பித்தேன் அல்லது எனது கருத்து வேறுபாட்டை தெரிவித்தேன் எனலாம்.
உடனேயே அறிக்கை, குழு என அனைத்தும் மாயமாகிவிட்டது. இந்தியாவின் மிக சக்திவாய்ந்த இருவருக்கு மட்டுமே பதில் சொல்லும் இடத்தில் இருந்த நாட்டின் உயர் அரசு அதிகாரியின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட குழு காணாமல் போய்விட்டது. ஊடக சுதந்திரம் குறித்த அறிக்கையை ஆர்டிஐயால் கூட பெற முடியவில்லை! என்னிடம் அந்த வரைவின் நகல் உள்ளது. குழுவின் நோக்கம் புலனாய்வு இதழியல் பற்றி கூட இல்லை. ஆனால் ஒரே ஒரு கருத்து வேறுபாடு குறிப்பிற்குப் பிறகு, அதுவும் காணாமல் போய்விட்டது.
நீங்கள் உரையில் நினைவுகூர்ந்தது போன்று புலனாய்வுச் செய்திகளை அளிப்பதற்கு பத்திரிக்கையாளர்களில் பலரும் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக அரசுத் துறையில் நடக்கும் ஊழல்கள், மோசடிகளை புலனாய்வதற்குத் தயாராக உள்ளனர். இம்முயற்சியின்போது அரசு ஒப்பந்தங்களுடன் பிணைந்துள்ள கார்ப்ரேட் ஊடக முதலாளிகள், உயர் இடத்தில் உள்ள செல்வாக்கு மிக்கவர்களின் நலனே பெரும்பாலான பத்திரிகையாளர்கள் சந்திக்கும் முதல் தடை.
விளம்பரதாரர் செய்தி, பொதுசொத்துகளை அழிப்பதற்கான உரிமத்தைப் பெறுவது, அரசின் தனியார்மயமாக்கல் எனும் களியாட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கோடி பொதுச் சொத்துக்களைப் பெறுவது, இதற்கு கைம்மாறாக ஆளும் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியுதவி செய்வது – இதுபோன்ற சலுகைகளைப் பெறுவதால் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக செயல்பட அவர்கள் அனுமதிப்பதில்லை. ஒருகாலத்தில் இந்தியர்களின் பெருமைமிக்க பணியாக கருதப்பட்ட பணியானது, இன்று வருமானம் என்றளவில் சுருங்கி, நான்காவது எஸ்டேட் மற்றும் ரியல் எஸ்டேட் இடையேயான வேறுபாட்டை மறந்துவிட்டன. அதிகார வர்க்கம் பற்றி உண்மையைப் பேசும் பத்திரிக்கை அவர்களுக்குத் தேவை இல்லை.
எப்போதையும் பெருந்தொற்று காலத்தில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் இந்நாட்டு பொதுமக்களுக்கு கூடுதலாக தேவைப்பட்டார்கள் நான் சொன்னால் நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். ஆனால் பொதுமக்களின், அவர்களது சொந்த வாசகர்கள் மற்றும் பார்வையாளர்களின் தேவைகளுக்கு சக்தி வாய்ந்த ஊடகங்களின் உரிமையாளர்கள் எப்படி எதிர்வினையாற்றினார்கள்? 2,000-2,500 ஊடகவியலாளர்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான ஊடகப் பணியாளர்களை பணிநீக்கம் செய்தார்கள்.






