நம்தியோ தராலே நிலத்தில் கால்பதித்ததும் நிதானம் கொள்கிறார். 48 வயது விவசாயி குனிந்து, மிதிக்கப்பட்டு உண்ணப்பட்டிருந்த பாசிப்பயறு செடிகளை உற்று பார்த்தார். பிப்ரவரி 2022-ன் குளிர் நிறைந்த அழகிய காலைப்பொழுது அது. சூரியன் வானில் மென்மையாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.
“இது புது வகையான பஞ்சம்,” என்கிறார் அவர்.
தராலேவின் விரக்தி மற்றும் அச்சங்களை அந்த வாக்கியம் வெளிப்படுத்துகிறது. ஐந்து ஏக்கர் நிலம் கொண்ட விவசாயியான அவர், மூன்று மாத உழைப்பில் விளைந்திருக்கும் துவரை மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றை இழந்துவிடும் கவலையில் இருக்கிறார். 25 வருடங்களுக்கும் மேற்பட்ட விவசாய அனுபவத்தில், அவர் பல்வேறு வகை பஞ்சங்களை கண்டிருக்கிறார். மழை பொய்த்தோ அல்லது அதிகமாக பெய்தோ நேரும் வானிலை பஞ்சங்கள்; நிலத்தடி நீர் குறைந்து நேரும் நீராதாரப் பஞ்சங்கள்; மண்ணின் ஈரப்பதத்தால் விளைச்சல் பொய்க்கும் வேளாண் பஞ்சங்கள்.
நல்ல விளைச்சல் என கருதும்போதே, நான்கு கால் விலங்குகளாலோ நிலத்தின் மீது பறப்பவைகளாலோ அது அழிந்து போய்விடுகிறது என எரிச்சலுடன் கூறுகிறார் தராலே.
”பகலில் நீர்க்கோழிகளும், குரங்குகளும் முயல்களும்; மான்களும் காட்டுப்பன்றிகளும் புலிகளும் இரவில்,” என்கிறார் அவர் பிரச்சனைகளை பட்டியலிட்டு.
“எங்களுக்கு விதைக்க தெரியும். பயிரை பாதுகாக்க தெரியாது,” என்கிறார் அவர் தோற்றுப் போன தொனியில். வழக்கமாக பாசிப்பயறு, சோளம், துவரை போன்றவறையும் பஞ்சு மற்றும் சோயாபீன் போன்ற பணப்பயிரையும் அவர் விளைவிக்கிறார்.




















