சென்னை மாநகராட்சி பள்ளிக்கு முதல் நாள் சென்றிருந்த ரகுவிற்கு, அங்கு கரும்பலகையில் எழுதியிருந்த வார்த்தை அல்லது தனக்கு முன்னால் இருந்த பாடப்புத்தகத்தில் இருக்கும் தமிழ் வார்த்தைகளில் ஒன்றுகூட புரியவில்லை. இதே ரகு, தனது சொந்த ஊரான உத்தரபிரதேசத்தின் நயோலி கிராமத்தில் உள்ள தனது பள்ளியில், போஜ்புரி அல்லது இந்தியில் வாசிக்கவும் எழுதவும் உரையாடவும் செய்வான்.
ஆனால் தற்போது புத்தகத்தில் உள்ள படங்களை பார்த்தே அது என்னவாக இருக்கும் என ஊகிக்கிறான். “ஒரு புத்தகத்தில் கூட்டல்-கழித்தல் அடையாளம் இருக்கிறது, அப்படியென்றால் அது கணிதம்; இன்னொரு புத்தகம் அறிவியலாக இருக்கலாம்; மற்றொரு புத்தகத்தில் பெண்கள், குழந்தைகள், வீடுகள் மற்றும் மலைகள் உள்ளது” என்கிறான்.
நான்காம் வகுப்பில் இரண்டாவது வரிசை மேஜையில் அமைதியாக அமர்ந்திருக்கும் ரகுவிடம், அருகிலிருக்கும் சிறுவன் கேள்வி ஒன்றை கேட்கிறான். “என்னைச் சுற்றி எல்லாரும் நின்றுகொண்டு தமிழில் ஏதாவது கேட்கின்றனர். அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்றே எனக்கு புரிவதில்லை. அதனால், மேரா நாம் ரகு ஹே என்பேன். இதைக்கேட்டு எல்லாரும் சிரிப்பார்கள். எனக்கு பயமாக இருக்கும்”.
ஜலாயுன் மாவட்டத்திலுள்ள நடிகோன் பிளாக்கில் இருக்கும் தங்கள் கிராமத்தை விட்டு 2015 மே மாதம் செல்ல முடிவு செய்தனர் ரகுவின் பெற்றோர்கள். அவர்கள் சென்னைக்கு ரயில் ஏறிய அன்று, அழுது, தரையில் புரண்டு அடம் பிடித்துள்ளான் ரகு. அவனது ஐந்து வயது சகோதரன் சன்னி, அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு விடவேயில்லை. “அவனுக்கு (ரகு) போக விருப்பமே இல்லை. இதை பார்க்கும் போது என் இதயமே வெடிப்பது போல் இருந்தது” என்கிறார் ரகுவின் அம்மா காயத்ரி பால்.
ஆனால் வேலைக்காக கிராமத்தை விட்டு வெளியேறுவதை தவிர ரகுவின் பெற்றோர்களுக்கு வேறு வழியில்லை. “விவசாயம் மூலம் எதுவும் கிடைக்காவிட்டால், நாங்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துதான் ஆக வேண்டும். அந்த வருடம் (2013-2014) எங்களுக்கு இரண்டு குவிண்டால் கம்பு மட்டுமே கிடைத்தது. பயிர்களுக்கு தண்ணீர் இல்லை, ஏற்கனவே கிராமத்தில் உள்ள பாதிபேர் வேலை தேடி வேறு மாநிலத்திற்கு சென்றுவிட்டதாக” கூறுகிறார் 35 வயதாகும் காயத்ரி. எப்படியோ அவருக்கும் அவரது கனவர் மனிஷூக்கும், 45 வயது, சென்னையில் உள்ள கட்டுமான தளத்தில் வேலை கிடைத்துவிட்டது. ஏற்கனவே அங்கு இவர்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலர் வேலை செய்து வருகிறார்கள்.












