முரளிதர் ஜவாஹிர் வேலையில் அமர்ந்துவிட்டால் தவறு நடப்பதற்கோ, குறுக்கீடு செய்வதற்கோ இடமில்லை. அவரது கைகள் மட்டும் வேகமாக நகர்ந்தபடி பருத்தி நூல்களைக் கொண்டு தோரணங்களை அமைதியாக இணைக்கின்றன. 70 வயதிலும் அன்றாடம் இந்த மூங்கில் சட்டகங்களை இணைப்பதற்கு அவரது உடலின் வலிமை இடம் கொடுக்கவில்லை.
மகாராஷ்டிராவின் இச்சல்கரஞ்சி நகரில் உள்ள அவரது நீல-பச்சை வண்ண செங்கல் வீட்டிற்கு வெளியே மூங்கில் கம்புகள், வண்ண காகிதங்கள், ஜெலட்டின் காகிதம், பழைய செய்தித்தாள் என பலவும் சிதறி கிடக்கின்றன. இவை யாவும் சில மணி நேரங்களில் வீடுகள், கோயில் வாசல்களை அலங்கரிக்கும் தோரணங்களாக நுட்பமான வடிவம் பெறுகின்றன.
முரளிதரின் சுருங்கிய உள்ளங்கைகள் மூங்கில் கம்புகளை 30 சம துண்டுகளாக வேகமாக வெட்டுகின்றன. அவற்றை ஒன்பது சமபக்க முக்கோணங்களாக அவர் மாற்றுகிறார். 3 அல்லது 10 அடி நீள மூங்கில் கம்புகளுடன் முக்கோணங்கள் இணைக்கப்படுகின்றன.
அலுமினிய கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள புளியங்கொட்டைகளை இடித்து செய்யப்படும் பசையைத் தேவைப்படும்போது முரளிதர் விரல் விட்டு நனைத்துக் கொள்கிறார். 60களில் உள்ள அவரது மனைவி ஷோபா காலையில் அதைச் செய்து தந்துள்ளார்.
“அவர் வேலை செய்யும்போது ஒரு வார்த்தைகூட பேச மாட்டார், யாரும் அவரிடம் குறுக்கீடு செய்ய மாட்டோம்,” என்கிறார் அவர்.
மூங்கில் சட்டகங்களை முரளிதர் அமைதியாக செய்து கொண்டிருக்கும் போது அதற்கான அலங்கார வேலைகளைச் செய்கிறார் ஷோபா - வண்ணமயமான வட்ட ஜெலட்டின் காகிதங்களை கொண்டு குஞ்சம் செய்கிறார். “வீட்டு வேலைகளை முடித்து ஓய்வு கிடைக்கும்போதெல்லாம், இதைச் செய்யத் தொடங்கிவிடுவேன். ஆனால் இந்த வேலை கண்களுக்கு அதிக அழுத்தத்தை அளிக்கிறது,” என்கிறார் அவர்.


















