“வேலை செய்வதை நாங்கள் நிறுத்திவிட்டால், மொத்த நாடும் மகிழ்ச்சியை இழந்துவிடும்.”
பாபு லாலின் கூற்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமெனில் அவர் அடுத்து சொன்ன விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். “யாரும் கிரிக்கெட் விளையாட முடியாது,” என்கிறார்.
சிவப்பும் வெள்ளையும் கொண்ட கிரிக்கெட் பந்து, கிரிக்கெட் வீரர்களால் வெறுக்கவும் நேசிக்கவும்படுகிறது. கோடிக்கணக்கான பார்வையாளர்களால் பார்க்கவும் படுகிறது. அதற்கான தோல், உத்தரப்பிரதேச மீரட்டிலுள்ள ஷோபாப்பூரின் ஆலைகளில் இருந்து வருகிறது. தோல் பணியாளர்கள் படிகாரக் கல்லைக் கொண்டு தோலை பதனிட்டு, கிரிக்கெட் பந்து தயாரிக்கும் துறைக்கு தேவையான அத்தியாவசிய மூலப்பொருளை தயாரிக்கும் ஒரே பகுதி நகரத்தில் இது மட்டும்தான். தோலுக்குள் ஒளிந்திருப்பவற்றையும் முழுமையான செழுமைக்கு உட்படுத்துவதுதான் பதனிடுதல் முறை.
”படிகார பதனிடுதல், நுட்பமான இழைகளையும் தாண்டி நிறம் உள்ளே செல்ல உதவும்,” என்கிறார் பாபு லால். அவரின் கூற்றை, அறுபதுகளில் மத்திய தோல் ஆய்வு நிறுவன ஆய்வு ஒன்று குறிப்பிட்ட விஷயம் உறுதிப்படுத்துகிறது. அதன்படி பந்து போடுபவரின் கையிலிருக்கும் வியர்வையும் பந்தை பளபளக்கவைக்கவென அவர் பயன்படுத்தும் எச்சில் பந்தை பாதிக்காமலிருக்க பதனிடுதல் உதவுகிறது.
62 வயதாகும் அவர், ஷோபாப்பூரில் சொந்தமாக வைத்திருக்கும் தோல் ஆலையின் ஒரு மூலையில் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். சுண்ணாம்பு பூசப்பட்ட தரை மின்னுகிறது. “எங்களின் முன்னோர் 200 வருடங்களாக இங்கு தோல் உற்பத்தி செய்திருக்கின்றனர்,” என்கிறார் அவர்.




















