“ஹார்மோனியம் தான் எங்கள் வாழ்க்கை, உயிர்நாடி, எங்கள் நிலம், எங்கள் வீடு.”
ஹார்மோனியத்தின் ஒலி எழுப்பும் பகுதியில் காற்று கசிவை கண்டறிவதற்காக காற்றடித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார் அந்த 24 வயது ஆகாஷ் யாதவ். அவர் பொத்தான்களை தளர்வு செய்து மேலும், கீழும் நகர்த்தி சுத்தம் செய்து கொண்டு சொல்கிறார், “எங்களுக்கு உணவு கிடைப்பதே சிரமமாக உள்ளது. எங்கள் குழந்தைகளை கவனிக்க முடியவில்லை – பசிக்கிறது என்று சொல்லக்கூடத் தெரியாத அவர்கள் உணவின்றி உறங்குகின்றனர். இந்த ஊரடங்கு தான் வாழ்வின் மிக துயர்மிகுந்த, மோசமான காலம்.”
ஆகாஷ் மற்றும் அவருடன் 17 பழுதுநீக்குவோர் மத்திய பிரதேசத்திலிருந்து 20 நகரங்களை கடந்து ஹார்மோனியம் பழுது நீக்குவதற்காக ஆண்டுதோறும் மகாராஷ்டிரா நகரங்களுக்கு அக்டோபர் மாதங்களில் வருகின்றனர். இப்பழுது நீக்கும் பணிக்கு கூடுதலான செவ்வியல் இசையறிவு, அதீத கேட்கும் திறன் போன்ற திறமைகள் தேவைப்படுகின்றன.
ஹார்மோனியங்களையும், கருவிப் பெட்டிகளையும் எங்கும் சுமந்து செல்வதால் அவர்களை பெட்டிவாலாக்கள் என்கின்றனர். மத்திய பிரதேசத்தின் யாதவ சாதிப் பிரிவில் (ஓபிசி) காவ்லி அல்லது அஹிர் சமூகங்களின் துணைப் பிரிவான இவர்கள் கராஹிர்ஸ்.
மகாராஷ்டிராவின் லத்தூர் நகரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரேனாப்பூரில் ஆகாஷ் என்னிடம் பேசினார்.18 ஹார்மோனியம் பழுது நீக்குவோரின் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்தால் 81 பேர் உள்ளனர். ரேனாப்பூர் முனிசிபல் குழு அனுமதி அளித்துள்ள திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் அவர்கள் சிக்கியுள்ளனர்.
இவர்கள் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டம் சிஹோரா தாலுக்காவில் 940 மக்கள்தொகை (கணக்கெடுப்பு 2011ன்படி) கொண்ட காந்திகிராமைச் சேர்ந்தவர்கள். “இந்த தொற்று [கோவிட்-19] தொடர்ந்து, பயணம் செய்ய விடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்தால், நாங்களும் இறந்துவிடுவோம். எங்களிடம் பணமில்லை. ஆண்டுதோறும் பயணம் தொடங்குவதற்கு முன் எங்களின் அனைத்து முக்கியமான கோப்புகளையும், எங்கள் வீடு மண் வீடு என்பதால் கிராமத்திலுள்ள அண்டை வீட்டாரிடம் கொடுத்துவிடுவோம். எனவே எங்களிடம் ‘மஞ்சள்‘ குடும்ப அட்டைகள் இல்லை. நாங்கள் இங்கு பசியால் வாடுகிறோம். தயவு செய்து எங்களை திரும்ப அனுப்புவதற்கு நீங்கள் அதிகாரிகளிடம் கோர முடியுமா?” என கேட்கிறார் ஆகாஷ்.






